By Village Missionary Movement
Monday, 24-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 24.03.2025
கவலை அது தேவை இல்லை
"கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" - மத்தேயு 6:27
மணி என்ற பையன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த ஒரு பாம்பை விளையாட்டாகப் பிடித்தான். பாம்பு மணியின் கையை இறுக்கமாக சுற்றிக்கொண்டு, தன் விஷப்பல்லைக் காட்டிச் சீறிக்கொண்டு இருந்தது. கூட இருந்த மற்ற பிள்ளைகள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்குமாக அலறி ஓடிக் கொண்டு இருந்தனர். மணி தன்னுடைய பிடியை விட்டால் பாம்பு நிச்சயமாக மணியைக் கொத்தி விடும். பயத்தில் மணி பாம்பை இன்னும் இறுக்கமாக பிடிக்கிறான். தன்னுடைய பரிதாப நிலையை நினைத்து கத்தி அழுதான். அழுது அழுது சோர்ந்து போய் விட்டான். அப்பொழுது அந்த வழியாக முதியவர் ஒருவர் வந்தார். மணியின் அலறல் சத்தம் கேட்டுத் திரும்பி அவனையும் அவன் கையில் இருக்கிற பாம்பையும் பார்த்து நடந்ததைப் புரிந்து கொண்டார். முதியவர், பயத்தில் அழுது கொண்டிருந்த மணியிடம், சிரித்துக் கொண்டே எவ்வளவு நேரம் தான் செத்த பாம்பை கையில பிடிச்சிட்டு இருப்ப, அதை கீழேப் போடு என்று கூறினார். மணி அப்போது தான் கவனிக்கிறான், தன் இறுக்கமான பிடியில் பாம்பு ஏற்கனவே செத்து விட்டது என்று.
ஆம், அன்பானவர்களே! இன்றைக்கும் நிறைய பேர் கவலை என்கிற செத்த பாம்பை கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல், அழுது புலம்பி பயத்தோடு இருக்கிறோம். கவலைப்படுவதினால் எதுவும் மாறப் போவதில்லை. கவலை நம் வாழ்வில் எதையும் சாதிக்கவும் விடாது. நீர்த்தேக்கம் போல கவலை நம்மை தேங்கின நிலையிலேயேதான் வைத்திருக்கும். இப்படியாக வேதத்தில் இன்னொரு வசனமும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று. எனவே நம்முடைய வருத்தம், பாரம் யாவற்றையும் இயேசுவின் மீது வைத்து விட்டு, கவலையில்லாதவர்களாக வாழ முயற்சிப்போம்.
புதிய ஏற்பாட்டில் மலைப் பிரசங்கத்தில் இயேசு இப்படியாக சொல்கிறார். எதைக் குறித்தும் கவலைப்படக் கூடாது என்று. பட்சிகளை விட நாம் விசேஷமானவர்கள். பட்சிகளைப் போஷிக்க அவர் வல்லவராய் இருக்கிறார். உலக ஆசீர்வாதங்களுக்காக கவலைப்படுவதை விட்டு அவருடைய ராஜ்யத்தை நாம் தேட வேண்டும். நம்மை உருவாக்கினவர் நமக்கு எல்லாவற்றையும் செய்வார் என்ற விசுவாசமே நமக்கு வேண்டும்.
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:-
வீட்டு கூட்டங்களை ஒழுங்கு செய்யும் கொர்நேலியுக்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864