By Village Missionary Movement
Thursday, 20-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 20.03.2025
சிரிப்பு
"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்..." - பிலிப்பியர் 4:4
மார்ச் 20 என்றாலே நமக்கு நினைவுக்கு வர வேண்டிய தினம் ஒன்று உண்டு. அது சர்வதேச மகிழ்ச்சி தினம். (International day of Happiness). சிரிக்கத் தெரிந்தவர்கள் மனிதர்கள் மாத்திரமே! மொழி தெரியாத இடத்தில் கூட உங்கள் சிறிய புன்முறுவல் மற்றவர்களை உங்கள் வசமாய் ஈர்த்து விடும். நீங்கள் நன்றாக சிரித்தால் என்ன நடக்கும் தெரியுமா? உங்கள் உடல் 45 நிமிடம் ரிலாக்ஸாக இருக்கும். மனஅழுத்த ஹார்மோன்கள் குறையும். எண்டோர்பின், செரோடோனின் போன்ற உடலுக்கு நன்மை அளிக்கும் ஹார்மோன்கள் அதிகரித்து வலிகள், மன அழுத்தம் குறைந்து மனதினை லேசாக்குகிறது. நம்முடைய வேதமும் எப்பொழுதும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் என்றே சொல்கிறது.
வேதத்தில் சிரிப்பு என்னும் அர்த்தம் கொள்ளும் நபர் ஈசாக்கு. ஆபிரகாமை தேவன் "உன்னை ஆசீர்வதிப்பேன், உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்து அழைத்தார். ஆபிரகாம் செல்வ சீமானாயிருந்தார். ஆனால் வாக்குத்தத்தம் பெற்றும், 100 வயது வரை பிள்ளை இல்லாதிருந்தது. அவருடைய மனைவி சாராளுக்கோ 90 வயதாகியது மட்டுமல்லாமல், அவளுடைய கர்ப்பமும் செத்துப்போனது. ஆபிரகாமுக்கு மறுபடியும் தேவதூதர்கள் வந்து, கர்ப்பத்தின் கனியை பெற்றுக் கொள்வாய் என்று ஆசீர்வதித்த நேரத்திலும், அதனைக் கேட்ட ஆபிரகாமும் "நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ?" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டார். அது போல சாராளும் (ஆதி 18 : 12) ல் " நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவர்" என தன் உள்ளத்திலே நகைத்தாள். இவ்விதமாய் அவ்விருவருமே நகைத்தார்கள். அவர்கள் வாழ்நாளெல்லாம் மகிழும் வண்ணமாக ஈசாக்கைக் கொடுத்து ஆசீர்வதித்தார். அந்த ஆபிரகாமுக்கு நாமும் கூட பிள்ளைகளாயிருக்கிறோமே.
எனக்கன்பானவர்களே! இனி என் வாழ்க்கை அவ்வளவுதான், முடிந்து விட்டது. நன்மையை இனி காண்பதில்லை என்று அழுது புலம்புபவரா? இழப்புகள், தோல்விகள், வியாதி என்னும் வலிகளினால் கண்ணீர் சிந்துபவரா? ஆண்டவரோடு பேசி உங்கள் இருதயத்தை லேசாக்குங்கள். வசனத்தை வாசித்து தேவனோடு உள்ள உறவில் பலப்படுங்கள். உலக சந்தோஷம் கொஞ்ச நேரம் மாத்திரமே. caring and sharing சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும். ஆம், கிறிஸ்துவை அறிவியுங்கள். குறைவுள்ளவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம்முடைய பெலன் என்பதை மறந்து விடாதீங்க!.
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:-
வாலிபர் மாலை நிகழ்ச்சி மூலம் சந்திக்கப்படும் வாலிபர்கள் ஊழியர்களாய் மாற ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864