By Village Missionary Movement
Friday, 14-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 14.03.2025
ஆமை
"...நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்;..." - 1 இராஜா. 18:21
ஆமை என்றாலே அதன் மேலிருக்கும் ஓடும், அது மெதுவாக நகர்ந்து செல்வதும் தான் நம் ஞாபகத்திற்கு வரும். மேலும் அதன் ஓடு மிகவும் உறுதியானது. தனக்கு ஆபத்து நேரிடும் என்றால் தன் ஓட்டிற்குள் தன்னை ஒழித்துக் கொள்ளும். அது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியது. அதுபோல நாமும் ஆபத்து என்றால் இந்த ஆமையைப் போல் தன் சுய பலத்தை நாடுகிறோம். கர்த்தரோடு இருப்பது போல் இருந்து கொண்டு உலகத்தின் காரியத்திலும் பற்றுடையவர்கள் பலர் உண்டு.
வேதத்திலும் அனனியா, சப்பீராள் குடும்பம் இதற்கு நல்ல உதாரணம். அப்போஸ்தலர் காலங்களில் எல்லோரும் கூடி ஒன்றாய் வாழ்ந்தார்கள். அப்போது விசுவாசிகள் நிலத்தையும், வீடுகளையும் விற்று அப்போஸ்தலருடைய பாதங்களில் வைத்தார்கள். அனனியா, சப்பீராள் குடும்பமும் தங்களுக்குரிய நிலங்களை விற்று பேதுருவினிடத்தில் கொடுக்க வந்தனர். ஆனால் கிரயத்திலே ஒரு பங்கை தங்களுக்கென்று வைத்துக்கொண்டு, மீதி பங்கை பேதுருவின் பாதத்தில் அனனியா வைத்தார். அப்பொழுது பேதுரு ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும் படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய் என்றார். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்ட போது விழுந்து ஜீவனை விட்டார். இது தெரியாமல் வந்த சப்பீராளுக்கும் இதே நிலைதான் வந்தது. அனனியா மற்ற விசுவாசிகளைப் போல் தன்னையும் கீழ்ப்படிகிறவராக, பரிசுத்தமுள்ளவராகக் காட்ட நிலத்தை விற்றார். ஆனால் நமக்குரியதையெல்லாம் கொடுத்து விட்டால் நம் தேவைக்கு என்ன செய்வது? நமக்கு கொஞ்சம் இருக்கட்டும் என அனனியா, சப்பீராள் இருவரும் எடுத்துக் கொண்டனர்.
ஆம், இதை வாசிக்கும் அன்பரே! நாம் ஆமையைப் போல் நம்மிடத்திலுள்ள நம்பிக்கைக்குரிய காரியங்கள் மேல் நம்பிக்கை வைத்துக் கொண்டு தேவனை பின்பற்றுவது போல் நடிக்கிறவர்களாயிருக்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வத்தையும் பின்பற்றிக் கொண்டு, கர்த்தரையும் தெய்வமாகக் கொண்டிருந்தபோது, எலியா நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள் என்றார். இயேசு கிறிஸ்துவும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது என்கிறார். (மத்தேயு 6 : 24 ) நாம் இன்று முடிவெடுப்போம். ஆமையைப் போல் அல்லாமல் கர்த்தரை மாத்திரம் பிடித்துக் கொண்டு, கர்த்தரின் வழிகளில் நடப்போம். நாம் நம்முடைய சுய பலத்தை சாராமல், அவரையே நோக்கிப் பார்ப்போம். ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:-
நம் டியூஷன் சென்டரில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864