By Village Missionary Movement
Monday, 10-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 10.03.2025
கொண்டு போவது என்ன?
"பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்;…" - மத்தேயு 6:20
கோடீஸ்வரர் ஒருவர் இருந்தார். தன்னிடம் எத்தனை கோடி ரூபாய் இருக்கிறது என்பதைக் காண்பிக்க, வீட்டின் மேல் அத்தனை கொடிகளைக் கட்டி வைத்தார். இன்னும் இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவரை விடவில்லை. சொத்து, பணம், தங்கம் என சேர்த்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் அவரைச் சந்திக்க ஊழியர் ஒருவர் சென்றார். வந்த ஊழியர், அந்த செல்வந்தனிடம் ஒரு குண்டூசியைக் கொடுத்து ஐயா, இதை பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள். பரலோகம் வரும்போது அங்கே வந்து அதை உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டார். இதன் அர்த்தம் தெரியாமல் செல்வந்தர் யோசித்தபோது அவரின் மனைவி இதன் அர்த்தத்தை சொன்னார்களாம், "நீங்கள் எத்தனை கோடி சம்பாதித்தாலும், மாடி மேல் மாடி கட்டினாலும், பூமியிலிருந்து செல்லும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். ஒரு குண்டூசியைக் கூட உங்களால் பரலோகம் கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்த்தவே இந்த ஊழியர் இப்படி செய்திருக்கிறார்" என்று. எத்தனை அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். அப்படியானால் சம்பாதிப்பதும், சேமிப்பதும் தவறா? என்ற கேள்வி எழலாம். தவறல்ல! ஆனால் எது முக்கியம்? சம்பாதிக்கவும், சேமிக்கவுமே நேரத்தை செலவிட்டு விட்டு, நித்தியத்தைக் குறித்து எண்ணமற்றுப் போனால் பிரயோஜனமில்லையே.
இயேசுகிறிஸ்து சொன்ன உவமையில், கீழ்க்கண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது நான் என்ன செய்வேன் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியத்தை இடித்துப் பெரிதாய் கட்டி எனக்கு விளைந்த தானியத்தையும், பொருள்களையும் அங்கே சேர்த்து வைத்து பின்பு ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேக பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறிப் புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்து சொல்லிக் கொண்டான். தேவனோ அவனை நோக்கி மதிகேடனே உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
பிரியமானவர்களே! பூமியில் நமக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம். இங்கு அநேக பூச்சி, துருவு மற்றும் திருடர்களும் அதிகம். ஆனால் தேவனுடைய ராஜ்யத்துக்கு நாம் முதலிடம் கொடுக்கும் போது தேவனே பரலோகப் பொக்கிஷத்தினால் நம்மை நிரப்பிடுவார்.
- Mrs. சுதா தேவபாஸ்கர்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 கிதியோன்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864