By Village Missionary Movement
Friday, 07-Mar-2025இன்றைய தியானம்(Tamil) 07.03.2025
இதுவே தருணம்
“...கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” -ரோமர் 10:13
அமெரிக்காவில் செய்ண்டு லூயிஸ் என்ற நகரிலுள்ள ஒரு கிறிஸ்தவர், ஒரு வழக்கறிஞரிடம் தயக்கத்துடன் ஒரு கேள்வியைக் கேட்டார். அநேக முறை உங்களிடம் கேட்க நினைத்ததை இப்போது கேட்கிறேன், “ஐயா நீங்கள் ஏன் கிறிஸ்தவராகவில்லை ?” (அதாவது ஏன் இரட்சிக்கப்படவில்லை ?) என்று கேட்டுவிட்டார். இதைக்கேட்ட வழக்கறிஞர், “குடிவெறியன் பரலோக ராஜ்யத்திற்கு அருகதையற்றவன் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதல்லவா? என்னுடைய பலவீனம் தான் உங்களுக்குத் தெரியுமே” என்றார். இதைக் கேட்ட அந்தக் கிறிஸ்தவர், “என் கேள்வி அதுவல்ல, நீங்கள் ஏன் ஒரு கிறிஸ்தவராயில்லை என்பதே” என்றார்.
அதற்கு அந்த வழக்கறிஞர், “ஒருவராவது இதுவரை இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டதில்லை. எப்படி ஒருவன் கிறிஸ்தவனாகக் கூடும் என்று ஒருவரும் என்னிடம் இதுவரை சொல்லவும் இல்லை” என்றார். உடனே அக்கிறிஸ்தவர் வேதத்தைத் திறந்து அநேக வசனங்களை அவருக்கு வாசித்துக் காண்பித்து, “ஜெபம் செய்யலாம்” என்றார். இருவரும் முழங்கால் போட, வழக்கறிஞர் முதலாவது, “ஆண்டவரே, என் பெலவீனம் உமக்குத் தெரியும்; அதை என் ஜீவியத்திலிருந்து அகற்றிப் போடும்” என்று ஜெபித்தார். ஜெபத்திலிருந்து எழுந்த போதோ இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவராகப் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று மிகுந்த சந்தோஷம் அடைந்தார். அன்றுமுதல் குடியை விட்டுப் பரிசுத்த ஜீவியம் செய்யத் துவங்கினார். யார் இந்த வழக்கறிஞர் தெரியுமா? இவர்தான் புகழ் பெற்ற ஸ்கோபீல்டு ஒத்த வாக்கிய வேதாகமத்தை (Scofield Reference Bible) உருவாக்கிய பண்டிதர் சி. ஐ.ஸ்கோபீல்டு என்பவர்.
அன்பான தேவபிள்ளைகளே! “இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” 2 கொரி 6: 2 என்ற வசனத்தை எப்போதும் இருதயத்தில் வைத்துக் கொள்வோம். தாமதிக்காமல் சுவிசேஷத்தைச் சொல்லிக் கொண்டேயிருப்போம். எப்படிப்பட்ட பாவங்கள் செய்தவராக இருந்தாலும் “இயேசுவே” என்று அவர் நாமத்தைக் கூப்பிடும் போது தேவனால் இரட்சிக்கப்படுவார்கள். பண்டிதர் ஸ்கோபீல்டும் சத்தியத்தைக் கேள்விப்பட்ட அந்த நிமிடம் இதுவே தருணம் என உணர்ந்து உடனடியாக கர்த்தரை ஏற்றுக் கொண்டார். நமக்கும் தருணம் கிடைக்கும் போதெல்லாம் அதை நழுவ விடாமல் நற்செய்தியைச் சொன்னால் தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்பவர்கள் எழும்ப அது ஏதுவாகும். “இயேசுவை குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள் ? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள் ? (ரோமர் 10:14)
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:
Day Care Centerல் உள்ள பிள்ளைகளைத் தாங்கும் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864