By Village Missionary Movement
Thursday, 13-May-2021இன்றைய தியானம்(Tamil) 13-05-2021
காணுமுன்னே மரணமில்லை
“கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய்...” – லூக்கா 2:26
1985-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள மதீரா என்ற சிறிய தீவில் வாழ்ந்து வந்த தாயார், தனது வயிற்றில் வளர்ந்து வரும் 4 மாத கருவை கலைத்துவிடலாம் என எண்ணினார். வாழ்க்கையில் விரக்தி, பொருளாதார நெருக்கம் இவைகளின் மத்தியில் இந்தக் குழந்தையை பெற்றெடுத்து என்ன செய்வது என்ற எண்ணம் அவரை இந்நிலைக்கு தள்ளியது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அந்தக் கரு கலையவில்லை. மாறாக 1985-ம் ஆண்டு ஆண் குழந்தையாகப் பிறந்தது. தேவ பக்தியுள்ள அந்த தாய் தனது தவறை உணர்ந்து, அந்தப் பிள்ளைக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரை வைத்தார். அவர்தான் இன்றைய கால்பந்து (Football) விளையாட்டின் நட்சத்திர வீரர், இவர் கோல் போடும் விதங்கள் மிகவும் விந்தையாயிருக்கும். மிகவும் சிறிய நாடான போர்ச்சுக்கல்லில் இருந்து வந்து ஆசியா, ஐரோப்பா என உலக நாடுகளை கலக்கி வருகிறார். தேவன் இன்னும் எவ்வளவோ காரியங்களை இவர் மூலமாய் நிறைவேற்ற வேண்டியுள்ளது!
வேதாகமத்திலே லூக்கா 2ம் அதிகாரத்தில் அற்புதமான ஒரு மனிதரைப் பார்க்க முடியும். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினால் சிமியோனுக்கு சொல்லப்பட்டிருந்தது. என்ன ஒரு வார்த்தை! என்ன ஒரு வாழ்க்கை! தேவன் சொன்னது நிறைவேறும்வரை மரணமில்லை. உயிர் போவதாக இல்லை. கர்த்தர் கிறிஸ்துவாகப் பிறப்பதைப் பார்த்த பின்புதான் மரணம் என்ற நிலை எவ்வளவு பாதுகாப்பானது! ஒரு நாள் வந்தது, இயேசு கிறிஸ்துவைத் தன் கைகளில் ஏந்தினார் அந்த மனிதர்.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! இந்த வேளையிலே உங்களுக்கு ஒரு நற்செய்தி! தேவன் உங்களைக் குறித்து வைத்திருக்கிற திட்டமும் தரிசனமும் நிறைவேறும் வரை நீங்கள் மரிப்பதில்லை. நிலையில்லாத உலகத்தில், உயிருக்கு உத்திரவாதமற்ற நாட்களில் வாழ்ந்தாலும் மரணத்தை நினைத்து நாம் கலங்கிடத் தேவையில்லை. தேவன் உங்கள் மூலமாக இந்த உலகில் ஏதோ ஒரு காரியம் செய்ய திட்டமிட்டு வைத்திருக்கிறார். அதற்காகவே இந்த நிமிடம் வரை உங்களை பாதுகாத்து, வாக்குத்தத்தங்களை தந்து வழிநடத்தி வருகிறார். அவர் கொடுத்த வாக்குத்தத்தமும் அந்தத் திட்டமும் நிறைவேறுவதை உங்கள் கண்கள் நிச்சயம் காணும். அதைக் காணுமுன்னே எந்த ஒரு பயமோ, நெருக்கமோ, மரணம் போன்ற சூழ்நிலையோ வந்தாலும் நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள். துர்செய்தியை கேட்பதினால் கலங்கிவிட வேண்டாம். உங்கள் இருதயம் கர்த்தரை நம்பி திடனாயிருக்கட்டும். ஆகவே தைரியமாக தேவன் மீதுள்ள நம்பிக்கையோடு இந்த உலகத்தையும், விசேஷமாக இந்த கொரோனா நாட்களையும் எதிர்கொள்வோம்.
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் ஜெபக்கூடார கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைய, இதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250