By Village Missionary Movement
Tuesday, 11-Feb-2025இன்றைய தியானம்(Tamil) 11.02.2025
வெட்டுக்கிளி
"...இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்" - மத்தேயு 18:20
நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக வரும்போது அதைக் கண்டு யாரும் பயப்படுவதில்லை. அது எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே ஒரு படையாக வரும்போது, வழியில் காணப்படும் எந்தவித பச்சையான இலைகளையும் விட்டு வைக்காமல், முழு பயிர்களையும் தின்று, மொட்டையாக்கி விடும். வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. எகிப்திலே தன்னுடைய வல்லமையை விளங்கச் செய்ய தேவன் கட்டளையிட்ட பத்து வாதைகளிலே ஒன்றை வெட்டுக்கிளிகளை வைத்தே செய்து முடித்தார். பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, வெட்டுக்கிளிகளைக் குறித்து இப்படி கூறுகிறார், "ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்"! அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார். தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும் போது செய்து முடித்து விடும். இதனிடமிருந்து நாம் ஒரு ஆவிக்குரிய காரியத்தை கற்றுக் கொள்ளமுடியும்.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நாட்களில் பேதுரு சிறைச்சாலையில் வைக்கப்பட்டார். பேதுருவை காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்தி நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தார்கள். அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் குழுவாகக் கூடி அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார்கள். பேதுரு சிறையில் இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக் கொண்டிருந்தார். இந்நிலையில், கர்த்தருடைய தூதன் பேதுருவை சிறையிலிருந்து வெளியே அழைத்து வந்தார். பேதுரு சிறையிலிருந்து விடுதலையாக காரணமாய் இருந்தது சபையாரின் ஊக்கமான வேண்டுதல். சபையார் என்று சொல்லும்போது ஒரு சிறிய கூட்டமாகவோ, அல்லது பெரிய கூட்டமாகவோ இருக்கலாம். எல்லோரும் குழுவாக இணைந்து ஜெபித்ததே விடுதலையைக் கொடுத்தது.
பிரியமானவர்களே! இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் குழுவாக கூடி ஜெபிப்பதின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை கற்றுக் கொள்ளலாம். கிறிஸ்தவ விசுவாசிகள், ஊழியர்கள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களை விட, ஒரு குழுவாக ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது, அரிய பெரிய காரியங்களை செய்யலாம். பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் நமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
வீட்டு ஜெபக்கூட்டங்களை ஒழுங்கு செய்யும் கொர்நேலியுக்கள் எல்லா தாலுக்காவிலும் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864