By Village Missionary Movement
Thursday, 06-Feb-2025இன்றைய தியானம்(Tamil) 06.02.2025
புறா
"...புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்" - மத்தேயு 10:16
புறா ஒரு மென்மையான அழகான பறவை. புறாவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? சமாதானம், மகிழ்ச்சி, புதியஆரம்பம், நம்பிக்கை இவற்றின் அடையாளம் புறா. புறா கபடற்ற, சுத்தமான பறவை. நோவா பெருமழை ஓய்ந்த பின் தண்ணீர் வற்றி இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பேழையின் ஜன்னலைத் திறந்து ஒரு புறாவை வெளியே விட்டார். அது தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இரண்டாம் முறை அனுப்பிய புறா திரும்பி வரும் போது தன் அலகில் ஒரு ஒலிவ இலைத் துளிரைக் கொத்தி வந்தது. இது ஒரு புதிய ஆரம்பம் மற்றும் நம்பிக்கைக்கு ஒரு அடையாளம் ஆகும். இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானகனிடம் யோர்தானில் ஞானஸ்நானம் பெற்று கரையேறும் போது பரிசுத்த ஆவியானவர் புறா வடிவில் அவர் மேல் இறங்கினார் என வேதத்தில் பார்க்கிறோம் இல்லையா? பரிசுத்த ஆவியானவரின் அடையாளம் புறா.
இயேசு கிறிஸ்து தம் சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பும் போது அவர் தம் சீடர்களிடம் சொன்ன வார்த்தை "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்." என்று கூறுகிறார். மற்ற பறவைகள் தாங்கள் கூடு கட்டும் இடங்களில் தன் குஞ்சுகளுக்கு பாம்பு மற்றும் கழுகினால் ஆபத்து வரலாம் என்று உணர்ந்தால் அவை தன் கூட்டை இடம் மாற்றி சென்று விடும். ஆனால், புறா, கூடு கட்டி முட்டையிட்டு அடைகாத்து, குஞ்சுகள் பொறித்தபின் அவைகளுக்கு ஆகாரம் தேடி வெளியே சென்று திரும்பி வரும்போது சில குஞ்சுகள் பாம்பு அல்லது கழுகினால் தாக்கப்பட்டு இறந்து போயிருக்கலாம் அல்லது கழுகினால் கவர்ந்து கொல்லப்பட்டிருக்கலாம். இதைக் கண்டவுடன் அப்புறா ஒரு மனிதனைப் போல அவ்விடத்திலிருந்து கண்ணீர் சிந்தி அழுமாம். ஆனால் ஒருபோதும் மனந்தளர்ந்து தன் கூட்டினை இடம் பெயர்ந்து கொண்டு செல்லாதாம். அதுபோல ஆண்டவர் தம் ஊழியத்திற்கென்று நம்மை அனுப்பும்போது நாம் அவமதிக்கப்படலாம், காயப்படுத்தப்படலாம், உயிர் சேதம் ஏற்படலாம், வாரினால் அடிக்கப்படலாம். சிறைவாசம் அனுபவிக்கலாம். ஆனால் இவை எதுவும் கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிக்காது. அதைத்தான் பவுல் ரோமபுரியாருக்கு எழுதும் போது "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? (ரோமர்8 : 36 - 39) என்று கூறுகிறார். நாம் மனம் சோர்ந்து நமக்கு நியமித்த பாதை மாறி போகாமல் நமக்கு நியமித்த பாதையில் செல்ல வேண்டும்.
"...அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது."
- Mrs. ஷீபா ஜான்
ஜெபக்குறிப்பு:
சமூக வலைதளங்கள் மூலம் செய்யப்படும் அனைத்து ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864