By Village Missionary Movement
Tuesday, 28-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 28.01.2025
குறுகிய வட்டம் வேண்டாமே
"...என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதைத் திட்டம் பண்ணினேன்,அதைச் செய்து முடிப்பேன்" – ஏசாயா 46:11
ஒரு சிறுமி தான் வளர்க்கும் தங்க நிற மீன்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த மீன் தொட்டியை சுத்தம் செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. எனவே அதை சுத்தம் செய்யலாம் என்று முடிவெடுத்த சிறுமி அந்த இரண்டு மீன்களையும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியில் விட்டாள். பின்பு மீன் தொட்டியை கழுவ சென்றாள். மீன் தொட்டியை கழுவி முடித்த பின்பு, மீண்டும் அந்த மீன்களை எடுப்பதற்காக பெரிய தொட்டிக்கு வந்து பார்த்தாள். அந்த மீன்கள் இப்போது இருப்பது பெரிய தொட்டியாக இருந்தாலும் முன்பு அந்த சிறியமீன் தொட்டியில் சுற்றுவது போல ஒரு சிறு பகுதியில் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தன.
நாமும் கூட பல வேளைகளில் நமக்கென்று குறுகிய வட்டத்தை போட்டுக்கொண்டு அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்னால் என்ன செய்ய முடியும், என்னால் முடிந்தது இவ்வளவுதான் என்று நாமே முடிவு கட்டி விடுகிறோம். ஆனால் தேவன் நம்மை குறித்து வைத்திருக்கும் திட்டம் பெரியது. நாம் நினைக்கும் வண்ணம் அவர் நினைப்பதில்லை. அவர் நம்மை குறித்து பெரிய வட்டத்தை வரைந்திருக்கிறார். ஆனால் நாம் இப்பொழுது பார்ப்பதோ அந்த வட்டத்தின் ஒரு சிறு பகுதிதான். ஆனால் அவரோ அந்த வட்டத்தின் முழு பகுதியையும் பார்க்கிறார்.
வேதத்திலும் பயந்து ஒதுங்கி மீதியானியருக்கு பயந்து போரடித்துக் கொண்டிருந்த கிதியோனைப் பார்த்து ஆண்டவர், பராக்கிரமசாலியே என்று அழைத்து, பெரிய வேலையைக் கொடுத்தார். மீதியானியர் என்ற பெரிய கூட்டத்தை கிதியோனின் கையில் கொடுத்தார். பெயர் சொல்ல பிள்ளை இல்லாத ஆபிராமை பார்த்து ஜாதிகளுக்கு தகப்பன் எனும் பொருள்படும் ஆபிரகாம் என்று பெயரிட்டு அழைத்தார். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்ற பெரிய வட்டத்தைக் காட்டி அவரை ஆசீர்வதித்தார். ஆம், ஆண்டவரின் வார்த்தையின் படி ஆனது. இதே போலத்தான் ஆண்டவர் நம்மை குறித்து வைத்திருக்கிற திட்டங்கள் பெரியவை. என்னால் முடியாது என்று சொல்லிய நாட்கள் போதும். நம்மை சுற்றி ஒரு சிறிய வட்டத்தை போட்டுக்கொண்டு வாழ்ந்ததும் போதும். தேவன் நம்மைக் குறித்து திட்டம் பண்ணி வைத்திருக்கிற பெரிய வட்டத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம். அவர் விரும்புகிற பாத்திரமாக வாழ்ந்து நம்மால் இயன்றதை கர்த்தருக்காக செய்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென். அல்லேலூயா!
- Mrs. எஸ்தர் மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு
மாவட்டங்கள் தோறும் 300 கிதியோன்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864