By Village Missionary Movement
Friday, 24-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 24.01.2025
பாதுகாக்கும் தேவன்
"கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணானகோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்" - நாகூம் 1:7
கர்த்தர் எப்போதும் நமக்கு நல்லவராகவும், நன்மை செய்கிறவராகவுமே இருக்கிறார். மேற்சொன்ன வசனத்தின் படி தேவன் இக்கட்டு நாளில் அரணான கோட்டையாக இருக்கிறார். நெருக்கப்படுகிற சூழ்நிலைகளில் இனி அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என்று கலங்கி நிற்கும் நேரத்தில் நம்மை தூக்கி எடுத்தார் இல்லையா? ஒரு நிகழ்வை சொல்கிறேன் கேளுங்கள்.
இரண்டு நாடுகளுக்கிடையே போர் முடிந்து, போரில் தோல்வியடைந்த நாட்டின் வீரர்களைக் கைதிகளாக ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அதில் ஒரு கைதி தப்பி ஓடினான். அதை இராணுவ வீரர்கள் கண்டு அவனை துரத்தி வந்தனர். அவன் ஒரு பாழடைந்த வீட்டின் ஒரு இருண்ட அறையில் சென்று பதுங்கி விட்டான். அவன் அந்த அறையிலிருந்து தேவனை நோக்கிக் கண்ணீரோடு ஜெபித்தான். அப்பொழுது, அவன் இருந்த அந்த அறை வாசலில் ஒரு சிலந்தி தன் வலையை பின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவ்வலை வாசலை அடைத்திருந்தது. அவனைத் துரத்தி வந்த வீரர்கள் அந்த அறை வாசலில் வந்து நின்று அவனைக் காணாமல் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டனர். இதன் காரணம் என்ன தெரியுமா? ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தான் சிலந்தி கூடு கட்டும். நம் தேவன் அற்புதமானவர். ஒரு சிறிய சிலந்தியைக் கொண்டு எப்படி ஒரு வீரனின் ஜீவனை காத்திருக்கிறார் பாருங்கள்.
அது போலவே வேதத்தில் மோசே என்ற தேவ மனிதன் இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் பிடியிலிருந்து காப்பாற்றி கூட்டிக் கொண்டு வரும் போது திடீரென பார்வோனின் சேனை அவர்களை விரட்டி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் தப்பிச் செல்ல வழி இல்லை. முன்னே மாபெரும் செங்கடல், பின்னே பார்வோனின் பெரிய சேனை. ஜனங்கள் பயந்து மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர். தேவன் அவர்களை எப்படி காப்பாற்றினார் தெரியுமா? ஆண்டவர் மோசேயை நோக்கி, "உன் கையில் இருக்கும் கோலை சமுத்திரத்திற்கு நேராக நீட்டு என்று சொன்னார். அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றை வீசச் செய்து, சமுத்திரத்தை ஒதுங்கச் செய்தார்." (யாத்திராகமம் 14 : 21). செங்கடல் பிரியும் முன் இந்த மக்களுக்கு முன்பாக சென்ற தூதன் விலகி இஸ்ரவேல் மக்களுக்கு பின்னாக நடந்தார். அவர்களுக்கு முன்பாக சென்ற மேகஸ்தம்பம் விலகி அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் சேராதபடி அவைகள் நடுவே நின்றது. எகிப்தியருக்கு அது மேகமும், அந்தகாரமுமாய் இருந்தது. இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கியது. நம் ஆண்டவர் எத்தனை அற்புதமானவர் பாருங்கள். செங்கடல் இரண்டாக பிரிந்து வெட்டாந்தரை வழியாக கடந்து சென்றனர். அவர்கள் கடந்து சென்ற பின் எகிப்தியரின் இராணுவம் வரும்போது கடல் மறுபடியும் ஒன்று சேர்ந்து எகிப்தியரின் இராணுவத்தை அழித்துப் போட்டது.
நீங்களும் மருத்துவரால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கலாம், கடன் பிரச்சனையில் மூழ்கும் நிலையில் இருக்கலாம், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கலாம். நம் தேவன் எப்படி ஒரு சிறிய சிலந்தியைக் கொண்டு அந்த வீரனைக் காத்தாரோ அப்படியே நம் ஆண்டவர் உங்களுடைய பிரச்சனை எதுவாக இருந்தாலும், தேவன் நம்மைக் கரம் பற்றி காப்பார். பிரியமானவர்களே. நம் இயேசு நம்மைக் கைவிட மாட்டார், நம்மை மறந்திட மாட்டார். கலங்காதீர்கள்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:
வேலூரில் நடைபெறும் வாலிபர் முகாமிற்காக, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864