By Village Missionary Movement
Thursday, 23-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 23.01.2025
நித்திய வழியிலே என்னை நடத்தும்
"வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்" - சங்கீதம் 139:24
தாவீது தனது ஆவிக்குரிய வாழ்க்கையை செப்பனிடத் தீர்மானித்தார். தாவீது போல ஒரு ஆராதனை வீரன் ஒருவனுமில்லை. அவரைப் போல கர்த்தரை முன்வைத்து செயல்பட்டவரும் ஒருவருமில்லை. தேவனது நாமத்திற்காக வைராக்கியம் காட்டியவர் அவரைப் போல ஒருவருமில்லை. இப்படிப்பட்டவர் தனது ஆவிக்குரிய வாழ்க்கையில் பத்சேபாளிடம் வீழ்ச்சியடைந்தார். இதனிமித்தமாக தேவ கோபத்திற்கு ஆளாகி போனார். பாவத்தில் வீழ்ச்சியடைந்தவர் பாவத்திலே தொடர்ந்து வாழவில்லை. தனது வாழ்க்கையை தேவனிடம் ஒப்படைத்து சீர்படுத்த விரும்பினார். அப்பொழுது பாடிய ஒரு பாடல் தான் சங்கீதம் 51. இதில் அவரது முறையிடுதல் இருப்பதை பார்க்கலாம். "என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்" என்று வேண்டிக் கொள்கிறார்.
“உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாதேயும், நிலையான ஆவியை எனக்குத் தாரும், பரிசுத்தாவியை என்னிலிருந்து எடுத்துக் கொள்ளாதேயும், நான் பாவம் செய்ததினால் என் இரட்சிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. இரட்சிப்பை எனக்கு புதுப்பித்துத் தாரும், உம்முடைய உற்சாகமான ஆவியினால் என்னைத் தாங்கும்” என்று தேவனிடம் தன் வாழ்க்கையை புதுமையாக்க விண்ணப்பம் பண்ணினார். பிரியமான தேவ ஜனமே, கடந்த 2024 ஆம் வருடத்தில் 12 மாதங்களைக் கடந்து வந்திருக்கிற மக்களே! உங்களது ஆவிக்குரிய வாழ்க்கை எந்த நிலைமையிலிருக்கிறது. வேதனை உண்டாக்குகிற காரியங்கள் உண்டா? தாவீது சொல்கிறார். சங். 139: 23 "தேவனே என்னை ஆராய்ந்து பாரும், என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும், வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்" தாவீதின் விருப்பம் தமது வாழ்க்கையை தேவனிடம் சமர்ப்பித்து, புதுப்பித்தால்தான் தேவ தயவும், உதவியும் நமக்கு உண்டாகும் என இந்த விண்ணப்பத்தை தேவனிடம் ஏறெடுக்கிறார்.
எனக்கருமையான தேவப் பிள்ளைகளே! உங்களது வாழ்க்கை இன்று செப்பனிடப்பட்டதாக உள்ளதா? இன்னும் சீரமைக்கப்படாத வாழ்க்கையாக உள்ளதா? இந்த புதிய வருடம் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாறுதலை உண்டாக்கும் வருடமாக அமைய உங்கள் வாழ்க்கையை தாவீதை போல தேவனிடம் ஒப்படைத்து, தேவனே என் வாழ்க்கையை எனக்கு செப்பனிட்டு, புதிய ஒரு வாழ்க்கையை வாழ உதவி செய்யும் என்று கேளுங்கள். நிச்சயமாக மனதுருக்கமான தேவன் உங்கள் வாழ்க்கையை புதுமையாக்கி கொடுப்பாராக! ஆமென்! அல்லேலூயா!
- Rev. S.A.. இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு
வேலூரில் நடைபெறும் வாலிபர் முகாமன்று தேவன் நல்ல காலசூழ்நிலையை கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864