By Village Missionary Movement
Thursday, 09-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 09.01.2025
நடனமாதுவும் நற்செய்தியாளரும்
"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்" - யோவான் 17:17
பதினாறு வயது நிரம்பிய அழகான நடனமங்கை தான் பிரிசில்லா. நடனத்தில் உலகப் புகழ் பெற வேண்டுமென்பதே அவளுடைய இலட்சியம். ஒரு நாள் அவள் ஒரு கனவு கண்டாள். அக் கனவில் அவள் தோழியரோடு வந்து விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு ஜனக் கூட்டத்தின் நடுவில் உயரமாக, மகிமை பொருந்தினவராக, பிரகாசமாகக் காணப்பட்ட ஒரு மனிதரைக் கண்டாள். அவர் இவளிடம் வந்து, "உன்னை அறியேன்" எனக் கூறிவிட்டுப் போய்விட்டார். இவள் மனம் சஞ்சலம் அடைந்தது. இந்நிலையில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று விடுதி அறையில் தங்கினாள். அங்கு பக்கத்து அறையிலிருந்த வாலிபப் பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. இரட்சிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் தன் கனவைக் கூறினாள். அந்தக் கனவைக் கேட்ட அந்தப் பெண் திடுக்கிட்டாள். "உயர்ந்த அந்த மனிதர் தான் இயேசு கிறிஸ்து" எனக்கூறி பிரிசில்லாவை இரட்சிப்பிற்குள் வழி நடத்தினாள். பிரிசில்லா இரட்சிக்கப்பட்டாள். நடனத்தைத் துறந்தாள். நற்செய்தியாளராக சீனாவிற்குப் புறப்பட்டுச் சென்றாள். சீன மிஷனெரி C.T. ஸ்டட்- ஐ மணந்து தீவிரமான ஊழியக்காரியானாள்.
பரிசேயன் வீட்டில் பந்தியிருந்த இயேசு கிறிஸ்துவை ஒரு பாவியான பெண் தேடி வந்தாள். அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று தன் கண்ணீரினால் நனைத்து, பெண்களுக்கு மகிமையாகக் கொடுக்கப்பட்ட தலைமயிரினால் துடைத்தாள். அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். தன் பாவங்களுக்காக அழுதாள். தன் மகிமையை இயேசுவின் பாதத்தில் சமர்ப்பித்தாள். தன் அளவில்லா அன்பை வெளிப்படுத்த, ஓயாமல் முத்தமிட்டாள். தன்னிடமிருந்த விலையுயர்ந்த பரிமளதைலத்தைப் பூசி தன் வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள். விளைவு இயேசு, இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடே போ" என்றார். இங்கு இயேசு அவளுடைய அநேக பாவங்களைப் பாராமல் அவளுடைய அன்பையும், விசுவாசத்தையும் பார்த்தார். அவளுடைய வாழ்வை செம்மைப்படுத்தி சமாதானத்தோடு அனுப்பினார். தவறான இலட்சியத்தோடு வாழ்ந்த பிரிசில்லாவைத் தக்க வழியில் நடத்தி செம்மைப்படுத்தினார். அதனால் அவள் அநேக ஆயிரம் ஆத்துமாக்களை ஆண்டவரண்டை வழி நடத்தினாள். இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்று விசுவாசித்து ஏற்றுக் கொள்ளும்போது, அவர் பாவங்களை மன்னித்து, பல தாலந்துகளைத் தந்து செம்மைப்படுத்துகிறார்.
நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். தூசி போன்ற பாவங்கள், களிம்பு போன்ற பாவங்கள் இருக்கிறதோ? இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து உங்கள் அன்பை அவரிடம் செலுத்துங்கள். உங்களுக்கு சமாதானம் அருளி உங்களையும் எடுத்து பயன்படுத்துவார்.
- Mrs. வனஜா பால்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நம் ஊழியர்களை தேவன் செப்பனிட்டு பரிசுத்தப்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864