By Village Missionary Movement
Sunday, 05-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 05.01.2025 (Kids Special)
நன்றி! நன்றி!
"தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்" - 2 கொரி. 9:15
ஹாய் குட்டிஸ், Happy New Year. எவ்வளவு வேகமாக நாட்கள் ஓடுது பார்த்தியா? 2024 ம் வருஷம் முடிந்து புது வருஷம் பிறந்திடுச்சு! இன்னைக்கு நம்ம Sunday School லில் ஒரு Special day. அது என்ன தெரியுமா? போன வருஷம் முழுவதும் நம்மை காத்த தேவனுக்கு நன்றி செலுத்தி, இந்த புதிய ஆண்டைக் காணச் செய்ததற்காக ஸ்தோத்திரம் செலுத்தப்போறோம். 0.k அதுக்கு முன்னாடி ஒரு குட்டி கதை கேட்போமா?
டாட்டா see you bye, School bus வந்துடிச்சி என அவசரமாக ஓடினாள் திவ்யா. Bus மறையும் வரை நின்று கையை அசைத்துக் கொண்டிருந்தார்கள் பாட்டி. சிறுவயதிலேயே தாய் தகப்பனை இழந்த திவ்யா பாட்டியிடம் தான் வளர்ந்து வந்தாள். பாட்டி ரொம்ப அன்பாகவும், அதே நேரத்தில் கண்டிப்பாகவும் இருப்பாங்க. திவ்யா நல்ல ஜெபிக்கிற பழக்கமுள்ளவள். தூங்கி எழுந்தவுடன், படிக்கும் முன், தூங்கும் முன் என எப்போதும் கருத்தாய் ஜெபிப்பாள். ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் முன் இயேசப்பாவுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவாள். நீங்க எப்படி? பூரியும் கொத்துக்கறி குழம்பும் அம்மா வச்சா லபக்ன்னு சாப்பிடுவீங்கதானே! திவ்யா எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வதைப் பார்த்த Class பிள்ளைங்களெல்லாம் அவளை கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், எனக்கு கிடைக்கும் எல்லா நன்மையும் இயேசப்பா தந்ததே என்று சொல்வதற்கு வெட்கப்படமாட்டாள்.
அன்றைக்கு காலையில் பாட்டிக்கு உடம்பு சரியில்லை. ஆனாலும் திவ்யாவுக்கு மதிய உணவு கொடுக்கணுமேன்னு எழுந்து வேகமாக வேலை செய்தார்கள். பாட்டி முடியாத போதும் எனக்காய் கஷ்டப்பட்டு சாப்பாடு செய்கிறார்களே என நினைத்து இயேசப்பாவுக்கு நன்றி சொன்னாள். Lunch Time-ல் திவ்யாவை கிண்டல் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது. திவ்யா டிபன் பாக்ஸைத் திறந்து ஜெபித்து விட்டு சாப்பாட்டை பார்த்தாள். காக்கா எச்சம் போட்டிருந்தது. அவ்வளவுதான் எல்லா பிள்ளைகளும் சிரித்து விட்டார்கள். "உன் ஜெபத்திற்கு பதில் இதுதானா?" என கேலி செய்தார்கள். திடீர்னு பாட்டி வேகமாக வந்து, "திவ்யா சாப்பிட்டுவிட்டாயா? சாம்பாரில் பல்லி விழுந்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன்" என அழ ஆரம்பித்தார்கள். "இல்ல பாட்டி இயேசப்பா என்னை பாதுகாத்துக்கொண்டார். காக்கா எச்சம் போட்டதால் நான் சாப்பாட்டை கீழே கொட்டிவிட்டேன் பாட்டி" என்றாள் திவ்யா. "என் ராசாத்தி இயேசப்பா உன்னை எத்தனை அற்புதமாய் பாதுகாத்தார்" என்று கண்ணீர் மல்க திவ்யாவை அணைத்துக் கொண்டார்கள். திவ்யாவை கிண்டல் செய்த பிள்ளைகளெல்லாம் நடந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். தங்கள் தவறை உணர்ந்து திவ்யாவுக்கு நண்பர்களாய் மாறினார்கள்.
செல்லக்குட்டிகளே! கடந்த வருடம் முழுவதும் இயேசப்பா உங்களை கண்மணி போல் பாதுகாத்து தீங்கு அணுகாமல், வியாதியில் சுகம் கொடுத்து, தேவைகளை சந்தித்து அதிசயமாய் நடத்தி வந்தாரே, இன்றுவரை உயிரோடு வைத்திருக்கிறாரே! இயேசப்பாவுக்கு நன்றி சொல்லணும். திவ்யாவை போல எதற்கெடுத்தாலும், எல்லா காரியத்திற்கும் நன்றி சொல்ல மறக்கவே கூடாது. O.k வா!
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864