By Village Missionary Movement
Saturday, 08-May-2021இன்றைய தியானம்(Tamil) 08-05-2021
நாம் அங்கீகரிக்கப்படுவோமா?
“பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி,…” - அப். 13:22
வேதத்தில் ஆண்டவர் சவுலை ராஜ்யபாரத்தினின்று தள்ளிவிட்டு தாவீதை அந்த ராஜ்யபாரத்திற்கு ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இதற்கான அநேக காரணங்களில் இரண்டை மட்டும் இன்று பார்ப்போம்.
ஆண்டவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதினிடத்தில் மற்றவர்களின் தியாகத்தை மதிக்கும் மனம் இருந்தது. ஒருமுறை இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்த போது, தாவீதிற்கு பெத்லகேமின் ஒலிமுகவாசலண்டை இருக்கும் கிணற்று தண்ணீரின் மேல் தாகம் வருகிறது. உடனே தாவீதோடிருந்த மூன்று பராக்கிரமசாலிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து பெலிஸ்தரின் பாளையத்திற்குள் போய் தண்ணீரை எடுத்து வருகின்றனர். தாவீதோ அவர்களின் தியாகத்தை எண்ணி தான் அந்த தண்ணீரை குடிக்காமல் கர்த்தருக்கென்று தரையில் ஊற்றிப்போட்டான். ஆனால் சவுலோ, கோலியாத்தை வீழ்த்த தாவீது தன் பிராணனையும் பாராமல் துணிந்து சென்றதை, உரிய முறையில் கனப்படுத்தக் கூட இல்லை. மாறாக தாவீதின் உயிரை வாங்கவே துடித்தார்.
சவுலுக்கும் தாவீதிற்குமிடையேயுள்ள மற்றுமொரு வேற்றுமையான குணம், தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களோடு அவர்கள் நடந்து கொண்ட விதம். சவுலை தாவீதின் கையில் கர்த்தரே ஒப்புக்கொடுத்திருந்தும், அவர் மீது கைபோட தாவீது துணியவில்லை. ஆனால் சவுலோ அகிமெலேக்கு என்கிற கர்த்தருடைய ஆசாரியர் கெஞ்சி கேட்ட போதும் அவரையும், அவருடனிருந்த ஆசாரியர்கள் 85 பேரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி குவித்தார். பாருங்கள், இவ்விருவருக்கும் இடையேயுள்ள மனநிலையை! ஆம், சவுல் இராஜ்யபாரத்தினின்று தள்ளப்பட்டார், தாவீதோ இராஜ மேன்மையை பெற்றுக்கொண்டார்.
தேவப்பிள்ளைகளே! நம்முடைய வாழ்வும் தேவனால் அங்கீகரிக்கப்படுவதும், தள்ளப்படுவதும் நாம் தேவனுக்கு பயப்பட்டு நடக்கும் விதத்திலே அமைந்துள்ளது. நாம் பிறரது அர்ப்பணிப்பை தியாகத்தை மதிக்கிறோமா அல்லது நாம் செய்வதுதான் நமக்கு பெரிதாகத் தெரிகிறதா? தேவனுடைய அபிஷேகத்தையோ, அபிஷேகிக்கப்பட்டவர்களையோ துச்சமாய் எண்ணி பேசுகிறோமா? சிந்திப்போம். சவுலைப் போல துணிகரமும், மனக்கடினமும் நமக்கு வேண்டாம். தாவீதைப்போல வாழ்ந்து நிச்சயமான கிருபைகளை பெற்றுக்கொள்வோம்.
- K. பெஞ்சமின் பிரைட்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரிகளின் மனைவிமார்கள் நிரோஷா, சூசன்னாள், ராஜகுமாரி ஆகியோருக்கு சுகப்பிரசவத்தை தேவன் கட்டளையிட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250