By Village Missionary Movement
Saturday, 28-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 28.12.2024
"…நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்" - கொலோசேயர் 3:15
தேவன் நமக்கு பல நன்மைகளை செய்து இருக்கிறார். முதலில் நாம் சுவாசிக்க ஆக்ஸிஜன் நிறைந்த காற்று, குடிப்பதற்கு நல்ல தண்ணீர், நாம் உண்ணுவதற்கு ஏற்ற அருமையான காய் வகைகள், கனிவகைகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் சிலவற்றை நாம் இலவசமாகவும், சிலவற்றை உழைப்பின் பலனாகவும் பெற்றுக் கொள்கிறோம். இத்தனையும் நமக்கு தந்த ஆண்டவரை நன்றியுடன் நினைக்கிறோமா? நன்றி மறவாமல் அவர் பணி செய்கிறோமா? என்று நம்மை நாமே ஆராய்வோம்.
வேதத்திலும் நன்றி மறந்த பலரை காணுகிறோம். யூதாவின் ராஜா அகசியா இறந்தபின் அவனுடைய தாயாகிய அத்தாலியாள் யூத குடும்பத்தில் உள்ள ராஜ வம்சத்தார் யாவரையும் கொன்று போட்ட பொழுது, ராஜகுமாரியாகிய யோசேப்பியாளும், அவள் கணவர் ஆசாரியன் யோய்தாவும், அகசியாவின் குமாரன் யோவாசை எடுத்து ஆறு வருஷம் ஒழித்து வைத்து காப்பாற்றினார்கள். ஏழாவது வருடம் யோய்தா ஜனங்களை கூட்டி யோவாசின் ஏழாம் வயதில், ஆலயத்தில் வைத்து அவனை ராஜாவாக்கினான். பின்பு ஜனங்கள், லேவியர்கள் யோவாசுக்கு பாதுகாப்பு கொடுத்து அத்தாலியாளை கொன்று போட்டு ராஜ்யபாரம் யோவாசின் கைக்கு வந்தது. யோவாஸ் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து ஆசீர்வதிக்கப்பட்டான். ஆசாரியன் யோய்தா மரணம் அடைந்தபின் அவன் மற்ற பிரபுக்களின் சொல் கேட்டு கர்த்தரை விட்டு திரும்பினான். கர்த்தரை சேவியாமல் அந்நிய தெய்வங்களை சேவித்தான். ராஜா யோவாஸ் தன்னை சிறுவயதில் இருந்து எடுத்து, வளர்த்து, அவனை ராஜாவாக்கி தான் மரணம் அடையும் வரை அவனுக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்து காப்பாற்றிய யோய்தாவை மறந்து, அவன் செய்த உதவிகள் காரியங்கள் யாவற்றையும் மறந்து, அவன் குமாரன் சகரியாவை, அதுவும் தேவனுடைய ஆலய பிரகாரத்திலேயே கொன்று போட்டான். நன்மைகளை மறந்து துரோகி ஆனான். கர்த்தர் இதனை கண்டார். யூதாவின் சேனைகள் மகா பெரிய சேனையாயிருந்தும் கர்த்தர் யோவாசை அவர்கள் கையில் ஒப்பு கொடுத்தார். அவர்கள் யோவாசை மகா வேதனைகுள்ளாக்கி விட்டுச் சென்றனர். அவனுடன் இருந்தவர்களே யோவாசை கொன்று போட்டனர்.
இயேசு கிறிஸ்துவும் நம்முடைய பாவங்களுக்காக தம் சொந்த இரத்தத்தையே சிந்தி நம்மை மீட்டு இருக்கிறார். இயேசுவின் பாடுகள் சிலுவை மரணம் யாருக்காக? நம் ஒவ்வொருவருக்காகவுமே. ஒவ்வொருவரையும் பாவ சாபத்திலிருந்து மீட்கவே அவர் இரத்தம் சிந்தினார். இந்த ஒப்பில்லாத அன்பை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?அல்லது அசட்டை செய்து நன்றியறிதலுள்ளவர்களாயிராமல் அவருடைய உயிர் தியாகத்தை மறுதலிக்கிறோமா? அன்பு சகோதர சகோதரிகளே, முதலில் தேவன் செய்த நன்மைகளுக்கு நன்றி செலுத்துவோம். அவர் அருளிய இரட்சிப்பை, மீட்பை அசட்டை செய்யாமல் ஏற்றுக்கொள்வோம், அவரது ஆசீர்வாதத்தையும் சுதந்தரித்துக் கொள்வோம். நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க தேவன் கிருபை பாராட்டுவாராக! ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
இவ்வாண்டின் ஊழிய திட்டங்களில் தேவ கரம் நம்முடன் இருந்து நடத்தியமைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864