By Village Missionary Movement
Friday, 27-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 27.12.2024
நன்றியுள்ள . . .
"...நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்" - கொலோசெயர் 3:15
வியட்நாமில் நடந்த போரில் ஒரு இராணுவத் தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றி விட்டு, அதனால் தான் காயப்பட்டதுமன்றி, அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது. அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். அப்பொழுது அந்த கூட்டத்திற்கு தன் மகனால் காப்பாற்றப்பட்ட அந்த போர் வீரனையும் அழைத்திருந்தார்கள். அவன் அங்கு தாமதமாக வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவுப் பொருட்களை அநாகரிகமாக சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனின் தியாகத்தால் நான் காப்பாற்றப்பட்டேன் என்று தன் ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு முடித்தவுடன் தன்னை அழைத்திருந்த அந்தக் குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய்விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது, இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான் என்று வருந்தினார்கள்.
இயேசுவானவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்து பேர் இயேசுவுக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அந்தபடியே பத்து பேரும் சுகம் அடைந்தார்கள். அவர்களில் ஒருவன் மாத்திரமே வந்து அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான். அப்பொழுது இயேசு சுத்தமானவர்கள் பத்து பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? என கேட்டார்.
ஆம், எனக்கன்பானவர்களே! கர்த்தர் செய்த நன்மைக்கு பதிலாக நம்மிடம் அவர் நன்றியைத் தவிர வேறு எதையுமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாம் மனிதர்கள் செய்யும் நன்மைக்கு கூட நன்றியை தெரிவிக்கிறோம். ஆண்டவருக்கு நன்றியை தெரிவிக்க மறந்து போகிறோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா? எத்தனை கண்ணீரின் பள்ளத்தாக்கு, சறுக்கலான பாதை, மறக்கப்பட்ட நிலைமை, தனிமையின் பாதை, வியாதியின் நேரம், எல்லாம் முடிந்தது இனி அவ்வளவுதான் என்று நினைத்த நேரம் எல்லாவற்றிலும் நம்முடன் இருந்து, நம்முடனே கூட இருக்கும் இயேசுவுக்கு நன்றி சொல்ல ஒரு நிமிடம் கூட மறந்து விடக்கூடாது. எத்தனையோ குறைச்சல்கள் மத்தியிலும் நம்மை இந்த நொடிப்பொழுது வரை உயிரோடு வைத்துள்ளாரே அதற்கு எவ்வளவு அதிகமாய் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்?
- Mr. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் டியூஷன் சென்டர் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864