By Village Missionary Movement
Tuesday, 24-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 24.12.2024
தேற்றுகிற தேவன்
"நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது" - ஆதியாகமம் 6:8
தேவனாகிய கர்த்தர் உலகத்தைப் படைத்து அழகான ஒரு குடும்பத்தை உண்டாக்கினார். ஆனால் தேவன் நல்லது என்று கண்டதெல்லாம் அக்கிரமம் நிறைந்ததாக மாறிப்போனது. பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது (ஆதி. 6: 6) அவர் இருதயத்தை தேற்றுவார் யாருமில்லை. ஆனால் ஒரே ஒரு மனுஷனை அவருடைய கண்கள் கண்டது. அவன் பெயர் நோவா. நோவா என்பதற்கு இவன் நம்மைத் தேற்றுவான் (ஆதி 5 : 29) என்று அர்த்தமாம். கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் தேடின போது , இவன் மாத்திரம் தகுதி உள்ளவனாக, அவருடைய இருதயத்தை தேற்றுகிறவனாகக் காணப்பட்டான். நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. பூமியெங்கும் அழிவு உண்டான போது பேழைக்குள் வைத்து குடும்பமாய் பாதுகாக்கப்படுகிறார். மனஸ்தாபப்பட்ட கர்த்தரின் இருதயத்தை தேற்றின நோவாவுக்குள்ளிருந்த சில குணநலன்களை நாம் சற்றே தியானிப்போம்.
நீதிமானாக இருந்தான் (ஆதி. 6 : 9): பாவம் நிறைந்த உலகத்தோடு நோவா ஒத்துப் போகவில்லை. தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும், உத்தமனுமாய் இருந்தான். உங்களைச் சுற்றி உள்ள சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் உங்கள் சிந்தனைகள், செயல்கள், நடத்தைகள் யாவும் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறதாக இருக்குமானால், அவருடைய கண்கள் உங்கள் பக்கமாய் திரும்பும். கர்த்தருடைய கண்களில் உங்களுக்குக் கிருபை கிடைக்கும்.
தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் (ஆதி. 6: 9): தேவனோடு சஞ்சரிப்பது என்பது அவரோடு கூட நடக்கிற அனுபவம். தேவனோடே சஞ்சரிக்கிறவர்கள் அவரோடே பேசிக் கொண்டே இருப்பார்கள். அவரோடு கூட நடக்கிற அனுபவம் நம் வாழ்வில் உண்டா? என்பதை சிந்திப்போம்.
பிரியமானவர்களே, நோவாவின் நிமித்தமாக அவனது முழுக் குடும்பமும் பாதுகாக்கப்பட்டது. நோவாவின் காலத்தில் நடந்தது போலவே, இப்பொழுதும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலகத்தில் நம்மை சுற்றிலும் பாவங்கள் அக்கிரமங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றது. மனிதனுடைய அக்கிரமமும் பாவமும் தேவனை துக்கப்படுத்துகிறதாய், மனஸ்தாபப்படச் செய்கிறதாய் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதின் மத்தியில் நோவாவைப் போல உங்கள் வாழ்வு தேவனை தேற்றுகிறதாய் இருக்கட்டும். ஆமென்.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நற்செய்தி கூட்டத்திற்கு வந்த மக்கள் உள்ளத்தில் தேவன் இடைப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864