By Village Missionary Movement
Friday, 20-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 20.12.2024
எதிரியின் மேல் அன்பு
"உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன?..." - லூக்கா 6:32
1950 ஆம் ஆண்டு, யுத்தம் துவங்கிய பொழுது, தன் தேசத்திற்காக போரிட தென்கொரிய படையிலே சேர்ந்தார் Dr.கிம். ஆனால் போரின் பயங்கரமான தாக்குதல்களுக்கு தான் தயாராகவில்லை என்பதை சீக்கிரத்திலேயே அறிந்து கொண்டார். போரிலே தன்னோடு இருந்த நண்பர்கள் இறந்து மடிந்ததைக் கண்ட பொழுது மரண பயம் அவரைப் பற்றிக் கொண்டது. தன்னுடைய ஜீவனின் பாதுகாப்பிற்காக தேவனிடம் மன்றாடினார். ஒரு வேளை நான் உயிர் தப்பினால் தன் எதிரிகளை நேசிக்க கற்றுக் கொள்வதாக தீர்மானித்தார். தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் கொடுத்தார். அவரும் கிருபையால் உயிர் தப்பினார். தேவனிடம் தன்னை அர்ப்பணித்தது போல தன் தேசத்தை எதிர்த்த வட கொரியா மற்றும் சீன தேசத்தில் உள்ள அனாதை பிள்ளைகளை பராமரித்தும், கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தும் உதவினார். அதன் மூலம், முன்பு அவரை எதிரியாக கருதியவர்கள் மத்தியில் அவர் அநேக நண்பர்களை சம்பாதித்தார்.
ஆனால் வேதத்தில் யோனா தீர்க்கதரிசியோ வேறு விதமான அடையாளத்தை விட்டு சென்றுள்ளார். மீனின் வயிற்றிலிருந்து காப்பாற்ற பெற்ற வியத்தகு செயல் கூட அவர் மனதை மாற்றவில்லை. இறுதியாக அவர் தேவனுக்கு கீழ்ப்படிந்தாலும் தேவன் நினிவே மக்களுக்கு இரக்கம் பாராட்டுவதை காண்பதை விட சாகிறது நலமாய் இருக்கும் என்று கூறுகிறார். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசமறியாத நினிவே தேசத்தார் மீது யோனா எரிச்சல் அடைந்தபடியால், அவர்கள் மேல் அன்பு செலுத்த அவரால் இயலவில்லை.
பிரியமானவர்களே, நம்மை குறித்து நாம் ஆழ்ந்து சிந்திப்போம். நாமும் Dr.கிம்மிடமிருந்த மனப்பான்மையை போல நம்மை வெறுப்பவர்களிடம் நம்மால் அன்பு செலுத்த முடிகிறதா? தேவன் நம்மேல் இரக்கம் பாராட்டினது போல நாமும் நமது எதிரிகள் மேல் அன்பு செலுத்த தேவ பெலனை நாடுகிறோமா? யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார். ஆனால் யோனாவின் மனப்பான்மையோ முற்றிலும் வேறுவிதமாய் இருந்தது. நம்மைக் குறித்து என்ன? சிந்திப்போம். நம் இருதயத்தில் தேவ அன்பு உண்டா? அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். நாம் அன்பில் நிலைத்திருப்போம். பிறரை நேசிப்போம், உலகுக்கு சாட்சியாக வாழ நம்மை அர்ப்பணிப்போம். ஆமென்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் நற்செய்தி கூட்டத்திற்காக எடுக்கப்படும் முயற்சிகள் வாய்க்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864