By Village Missionary Movement
Monday, 16-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 16.12.2024
கொந்தளிப்பை அமர்த்தும் தேவன்
"…காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார்" - மாற்கு 4:39
வானூர்தியில் அதி உயரத்தில் அநேகர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வானூர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிலையற்று பறந்தது. அதில் பயணித்த அனைவரும் பயந்து கூக்குரலிட்டனர். தங்களுக்கு தெரிந்தபடி ஜெபிக்க ஆரம்பித்தனர். ஆனால் ஒரு சிறு பெண் குழந்தை மட்டும் எந்த விதமான பதற்றமும் இன்றி தன் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவளருகே இருந்த பயணி ஒருவர் அவளிடம், " மகளே! உனக்கு பயமாக இல்லையா? என கேட்டார். அதற்கு அவள் நான் ஏன் பயப்பட வேண்டும். இந்த வானூர்தியை இயக்குவது என் அப்பா தான். அவர் நிச்சயமாக பத்திரமாக நம்மை நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் சேர்த்து விடுவார் என்று பதில் சொன்னாள்.
உலக பிரகாரமான தகப்பன் மேல் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறோம். நம்மை உருவாக்கிய தேவனை நம்புவது நமக்கு கடினமான காரியமாக இருக்கிறது. அன்று இயேசுவின் சீடர்களிடம் இயேசு, "அக்கரைக்குப் போவோம் வாருங்கள்" என்று சொல்லி படகில் ஏறினார். (மாற்கு 4 : 35 ). அந்த நேரம் பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பத்தக்கதாக அலைகள் மோதியது. இயேசுவோ படகின் பின்னணியத்தில் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அந்த சமயத்தில் தான் சீடர்கள் இயேசு கிறிஸ்துவை நோக்கி உயிரை உலுக்கும் ஒரு கேள்வியைக் கேட்டனர். "ஆண்டவரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா? அவர் செய்த அற்புதங்களை அருகே இருந்து பார்த்தவர்கள், அவர் மேல் நம்பிக்கை இன்றி இத்தகைய கேள்வியை கேட்டு விட்டனர். இயேசு எழுந்து காற்றையும், கடலையும் அதட்டி அமைதிப்படுத்தினார்.
நாமும் பல வேளைகளில் தேவனை நோக்கி இதே போல் கேள்வி கேட்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து கோபம் கொள்ளாமல், "ஏன் பயப்படுகிறீர்கள்?" என்றுதான் கேட்கிறார். நம் வாழ்க்கை என்னும் படகில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடன் பயணம் செய்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அவருடைய கரங்களில் நாம் இருக்கும்போது சூறாவளியின் மத்தியிலும் நாம் சமாதானமாய் இருக்க முடியும். என் ஆண்டவர் என்னை பாதுக்காப்பார் என்ற விசுவாசத்தோடு நாம் நம் வாழ்க்கை பயணத்தை தொடர்வோம். சூழ்நிலைகளைக் கண்டும் தற்சமயம் நாம் இருக்கும் நிலைமையை மனதில் கொண்டும் கலங்க வேண்டாம். விசுவாசித்தாலே பெரிய கொந்தளிப்பையும் அடக்கிப்போடும் தேவன் நமக்காய் பெரிய காரியங்களைச் செய்வார்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாநிலத்திலும் 500 மிஷனெரிகள் எழும்ப. ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864