By Village Missionary Movement
Saturday, 14-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 14.12.2024
மறக்கிறவர்கள் மத்தியில் மறவாத தேவன்
"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" - ஏசாயா 49:15
பிரியமானவர்களே! அன்பின் வாழ்த்துக்கள். திலீப் சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே பிறரிடம் அன்பாக இருப்பதிலும், நண்பர்களுக்கு ஏதாவது கொடுப்பதிலும் உற்சாகமாக இருப்பான். அதனால் அவனை அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும். பள்ளியில் படிக்கும் போதும், பொருளில்லாத மாணவர்களுக்கு உதவுவதில் சிறந்தவன். பள்ளிப்படிப்பை ஊரிலேயே முடித்த திலீப் இறுதியாண்டில் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றிருந்தான். அதனால் உயர்கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த ஊர் ஜனங்கள் அவன் வெளியூர் செல்வதைக் குறித்துக் கவலைப்பட்டனர். எனினும் அவன் வெளியூர் சென்று படிக்க வேண்டிய நிர்ப்பந்தம், அவனும் சென்றான். பல வருடங்கள் கழித்து அவன் படிப்பை முடித்து ஊர் திரும்பினான். அந்த ஊரார் அவனை மறந்தே போயிருந்தனர். திலீப்புக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆம், பிரியமானவர்களே! இது போலத் தான் நம்மை நேசிப்பவர்கள், நம்மை விரும்பியவர்கள் ஒருநாள் நம்மை மறந்து போய் விடுவார்கள். ஆனால் நம்மைப் படைத்த தேவன் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. வேதத்தில் கூட ஆதி. 40 : 23-ல் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை மறந்து விட்டதைப் பார்க்கிறோம். ஆனாலும் தேவன் யோசேப்பை மறக்காமல் நினைத்தருளி அவன் சிறையிருப்பை மாற்றினார். இங்கு சிறுமையாக்கப்பட்ட யோசேப்பை அந்த தலைவன் மறந்து போனதைப் பார்க்கிறோம். ஈசாய் வீட்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு சாமுவேல் தீர்க்கதரிசி வந்திருந்த போது, ஈசாய் அனைத்து பிள்ளைகளையும் அழைத்திருந்தார். ஆனால் காட்டிற்கு ஆடுகளை மேய்க்க சென்ற தனது கடைசி பிள்ளையான தாவீதை மறந்துவிட்டார் சொந்த தகப்பன். அதேபோல் யோபு 19:14 ல் யோபுவின் சிநேகிதர் அவனை மறந்து விட்டதாக பார்க்கிறோம். அதாவது நோய்வாய்ப்பட்ட யோபுவை சிநேகிதர் மறந்தார்கள். ஆனால் தேவன் யோபுவை நினைத்தருளி அவனுடைய சிறையிருப்பை மாற்றினார்.
ஆம், அன்பானவர்களே! நோய்வாய்ப்படும் போது, சிறுமைப்படும் போதும், நெருக்கப்படும் போதும் ஜனங்கள், சிநேகிதர், உற்றார் நம்மை மறந்து போகலாம். ஆனால் கர்த்தர் நம்மை ஒரு போதும் மறந்து போவதில்லை. எனவே நாம் மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம். மேலும் கர்த்தர் நம்மைப் பார்த்து, “இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை” என்று ஏசாயா 44 : 21 இல் கூறியுள்ளார். தேவனை நம்புவோம்! வாழ்வில் உயர்வோம்!
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
எல்லா தாலுக்காவிலும் 12 சிறுவர்கள் அடங்கிய சில்ரன்ஸ் கிளப் ஆரம்பிக்கப்பட. ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864