By Village Missionary Movement
Friday, 13-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 13.12.2024
அற்புத மாற்றம்
"…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" - 2 கொரிந்தியர் 5:17
ஸ்காட்லாந்திலுள்ள ஒரு நண்பர்கள் குழு, பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்து மகிழ்ச்சியாக ஒரு நாள் முழுவதையும் செலவழித்துவிட்டு ஒரு விடுதியில் கூடியிருந்தார்கள். அந்த குழுவில் ஒருவர் தான் பிடித்த மீன்களைப் பற்றி கூறும்போது கையை ஆட்டிப் பேசியதில் ஒரு கண்ணாடி பூ ஜாடியைத் தட்டி விட்டு விட்டார். சுவரில் பட்டு நொறுங்கி பளிச்சென்று இருந்த வெள்ளைச் சுவரில், கறையை ஏற்படுத்தியது. அந்த மனிதர் விடுதி மேலாளரிடம் மன்னிப்பு கேட்டதோடு, தான் ஏற்படுத்திய சேதத்திற்கு பணம் செலுத்துவதாகவும் கூறினார். ஆனாலும் அந்தச் சுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வருந்தினார். அருகிலிருந்த வேறொருவர், "கவலைப்பட வேண்டாம்", என்று ஆறுதல் சொல்லி, எழுந்து வந்து தன்னிடமிருந்த ஒரு தூரிகையால் (பிரஷ்) அந்தக் கறையைச் சுற்றி வரைய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்தக் கறை ஒரு கலைமானாக மாறியிருந்தது. அந்த மனிதர் விலங்குகளை அழகாகப் படம் வரையக்கூடிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபலமான E. H. லேண்ட்சியர்.
சங்கீதம் 51 ஐ எழுதிய இஸ்ரவேலின் மிகச் சிறந்த ராஜாவாகிய தாவீது, தன்னுடைய பாவங்கள் காரணமாகத் தன் மீதும், தன் ராஜ்யத்தின் மீதும் கறைபடியச் செய்தார். தன் சேவகன் மனைவியை அபகரித்ததோடு அவனை (உரியா) போரில் மரணமடையும்படி செய்தான். அந்த இரண்டு செயல்களுக்குமே மரணம் தான் தண்டனை. ஆனால் அவன் தேவனின் கரங்களில் விழுந்து, தன்னைத் தரை மட்டும் தாழ்த்தி தேவனிடம், "உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்" என்று மன்றாடினார். உடனே தாவீதின் பாவத்தினால் உண்டான கறையைத் தேவன் கழுவி சுத்திகரித்து, மன்னித்து, மறந்து தன் இருதயத்திற்கு ஏற்றவன் எனக் கூறுகிறார். தாவீதுக்குத் தந்த வாக்குத்தத்தங்களைஅவர் வாழ்வில் நிறைவேற்றினார்.
தவறுவது மனித இயல்பு. ஆனால் அந்தத் தவறு தவறாகவே இல்லாமல் இருக்க, அதனால் வரும் சாபத்திற்கு நீங்கலாக இயேசுவிடம் மன்றாடுங்கள். அவரது கரத்தில் நம்முடைய கறைபடிந்த வாழ்வை கொடுக்கும் போது அதை அவர் அற்புதமாய், பிறர் கண்டு ஆச்சரியப்படும் வகையில் மாற்றுவார். துண்டிக்கப்பட்ட அவருடனான உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள். அப்பா பிதாவே என அழைக்கும் புத்திர சுவிகாரத்தைத் தந்து அவரோடு இருக்கும் நித்திய சந்தோஷத்தையும் தருவார். ஆம், என்னால் பரிசுத்தமாய் வாழ முடியவில்லை என்ற குற்றமனசாட்சியோடு வாழாமல் தேவனிடம் அறிக்கையிட்டு கெஞ்சி புது சிருஷ்டியாக மாறுங்கள். பழையவைகள் எல்லாம் ஒழிந்து போகும். அல்லேலூயா!
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு
ஊழியர் பயிற்சி முகாமிற்கு வந்த வடமாநில மிஷனெரிகள் நம் தரிசனத்தை உள்வாங்கி செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864