By Village Missionary Movement
Thursday, 12-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 12.12.2024
முழங்கால் வீரன்
"…தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்" - ஏசாயா 35:3
அமெரிக்கத் திருச்சபை வரலாற்றில் பரிசுத்தமுள்ள தேவமனிதர்கள் என பேர் பெற்றோர் பலர் உண்டு. அவர்களுள் ஜான் ஹைடு( John Hyde) என்பவர் ஒரு மன்றாட்டு ஜெபவீரர். அவருடைய ஜெபஅறையே அவர் வாழும் இடமாக இருந்தது. அங்கே அவர் ஆண்டவரோடு மகிழ்ந்திருந்தார், அங்கே அவர் புலம்பி அழுதார், அங்கே வளர்ச்சி அடைந்தார். மனக்கடினமுள்ள பாவிகளுக்காக அவர் ஜெபஅறையில் அழுத அழுகுரலை அநேகர் கேட்டிருக்கின்றனர். வாக்குக்கடங்காத பெருமூச்சோடு அவர் வேண்டுதல் செய்ய அறிந்திருந்தார். ஒருமுறை ஜெபிக்க முழங்கால்படியிட்டு கண்விழித்தபோது 36 மணிநேரங்கள் கடந்திருந்தது. முழங்காலில் நின்று ஜெபித்து ஜெபித்து அவரது கால்கள் ஒட்டகக்கால்கள் போல் காணப்பட்டன. அவரது ஆடையின் முழங்கால் பகுதி தேய்ந்து கிழிந்து காணப்படும். இம்முழங்கால் வீரர் 17 ஆண்டுகள் நம் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார். நமக்காக அவர் வடித்த கண்ணீரின் ஜெபத்தின் மேலேயே இன்றைய திருச்சபை கட்டப்பட்டுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன்.
வேதத்திலே, இப்படி கண்ணீர் விட்டு ஜனங்களுக்காக புலம்பின தீர்க்கதரிசி எரேமியா,"என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. என் குடல்கள் கொதிக்கிறது" என்று அங்கலாய்க்கிறதை புலம்பல் 2ல் வாசிக்கிறோம். ஆம், பாவத்தில் சிறைப்பட்டுக் கிடக்கும் ஜனங்களின் நிலைக்காக பரிதபிக்கும் ஜெபவீரனின் ஜெபம் புலம்பலாகவே இருக்கும். அவர்கள் தங்கள் முழங்காலுக்கும் கண்களுக்கும் ஓய்வு கொடுக்க விரும்பமாட்டார்கள்.
அன்பரே! உங்களுடைய ஜெபவாழ்வு எப்படியிருக்கிறது? முழங்கால் ஊன்றி ஜெபிக்கும் பழக்கம் உண்டா? அயராது உழைக்கும் நபரின் பாதங்கள் வெடிப்பினால் நிறைந்திருக்கும். கடினமான ஆயுதத்தைப் பிடித்து வேலை செய்பவர்களின் கரங்கள் காய்ப்பு பிடித்திருக்கும். அப்படியே அதிகமாக ஜெபிக்கும் மனிதர்களின் முழங்கால்களில் காயங்கள் இருக்கும். இப்படி நமது முழங்கால்கள் கடினமாயிருந்தால் நமது இருதயம் மென்மையாயிருக்கும்; நமது முழங்கால் மென்மையாயிருந்தால் நமது இருதயம் கடினமாய்த்தான் இருக்கும். இன்று உங்கள் முழங்காலைப் பாருங்கள். இருதயத்தின் நிலையை அறிந்து கொள்வீர்கள். இருதயத்திலுள்ள அனைத்து பிரச்சனைக்கும், முழங்கால் மென்மையாயிருப்பதே காரணம். ஆகவே முழங்காலை முடக்குங்கள், பாவப் போராட்டங்களும் பலவித பிரச்சனைகளும் முடிவுக்கு வருவதைக் காண்பீர்கள்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
நாம் சந்திக்கும் எல்லா மாவட்டங்களிலும் 30 வீட்டு ஜெபக்கூட்டங்கள் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864