By Village Missionary Movement
Thursday, 06-May-2021இன்றைய தியானம்(Tamil) 06-05-2021
மன்னிப்பின் மாட்சிமை
“...கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” – கொலோசெயர் 3:13
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரான திரு. நெல்சன் மண்டேலா அவர்கள் ஒரு நீண்ட நெடுங்கால போராட்டத்திற்குப் பின் ஜனாதிபதியானார். ஒரு நாள் அவர் தனது பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தார். ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தனர். அப்பொழுது தற்செயலாக எதிர் மேஜையை கவனித்த அதிபர் அங்கு தனியாக ஒருவர் உணவுக்காகக் காத்திருந்ததைக் கண்டு, தன் படைவீரனை அனுப்பி, அவரை தம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும்படி கூறினார். அவரும் தனது உணவுடன் வந்து அமர்ந்து உணவு உட்கொண்டபின் புறப்பட்டார். அப்பொழுது ஒரு படைவீரன் அதிபரிடம் “அந்த மனிதர் பார்ப்பதற்கே மிகவும் நோய்வாய்ப்பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும்போது கைகள் இரண்டும் மிகவும் நடுங்கின” என்றான்.
அதற்கு அதிபர் “வீரனே அதுவல்ல உண்மை. உண்மை என்ன தெரியுமா? நான் முன்பு சிறையில் இருந்தபோது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக்காவலராக இருந்தார். என்னை அடிக்கடி கொடுமைப்படுத்துவார். அவர் கஷ்டப்படுத்தும்போதெல்லாம் நான் கூக்குரலிட்டு, களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன். இதே மனிதர் அந்நேரம் என்னிடம் வந்து தலைமேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார். நான் இப்போது தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார். ஆனால் இது எனது பழக்கமல்ல. பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒருபோதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதனையோ தட்டியெழுப்பாது; அழித்துவிடும். அதே நேரம் சில விஷயங்களில் மனதின் சகிப்புத்தன்மை, பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்” என்றார் மண்டேலா.
ஆம், பிரியமானவர்களே! நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியாய் இருக்கிற இயேசுகிறிஸ்து “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று சிலுவையில் தன்னை அறைந்தவர்களுக்காக வேண்டுதல் செய்கிறார். நாமும் கூட அநேக நேரங்களில் மற்றவர்களால் நமக்கு ஏற்பட்ட மன காயங்கள், வேதனைகளைக் குறித்தே அதிகம் பேசி கவலைப்படுகிறோம். நியாயமில்லாமல் நான் தண்டிக்கப்படுகிறேனே என்று முறுமுறுப்புடன், மற்றவர்கள் மேல் உள்ள கசப்புடனே நாம் வாழ்கிறோம். ஆனால் வேதம் சொல்கிறது பிறரது தப்பிதங்களை மன்னித்தால் நம் குற்றங்களும் மன்னிக்கப்படும் என்று!
மன்னியாமை என்பது நமக்கு நாமே வெட்டும் குழி. அதனால் வருகிற கசப்பு, வெறுப்பு, கோபம், சுயபரிதாபம் இவையெல்லாமே நம்மையும் வேதனைப்படுத்தி மற்றவர்களையும் வேதனைப்படுத்தும். அதுமாத்திரமல்ல பல விதமான வியாதிகளுக்கும் அது மூலக்காரணம். ஆகவே நாம் இந்த பூமியில் சுகமாய் வாழ்வதற்கு, கிறிஸ்து நம்மை மன்னித்தது போல நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். கணக்கு பார்த்தோ, காரணத்தை வகை பார்த்தோ மன்னிப்பதல்ல மன்னிப்பு. இப்பூமிதனில் நாம் கவலையற்று சுகமாய் வாழ்ந்திட, கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்திட “அன்பு” என்னும் நேசத் தீ நம்மில் எரிந்திட வேண்டும்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வெளிவரும் Children’s Special நிகழ்ச்சியை You tube மூலம் அநேக சிறுபிள்ளைகள் பார்த்து கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250