By Village Missionary Movement
Friday, 06-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 06.12.2024
சுவிசேஷத்திற்காக இழந்து போதல்
"...என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்" - மாற்கு 8:35
17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கிறிஸ்தவத்தைப் பிரசங்கிக்கக் கூடாதென்ற சட்டம் இருந்தது. அது தெரிந்த போதிலும் 'ஜாண் ஹக்கெட்' என்ற போதகர் தேவாலயத்தில் தேவசெய்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சிப்பாய் ஒருவன் தன் கையில் துப்பாக்கியுடன் நேராக பிரசங்கபீடத்தின் முன்பு வந்து நின்று, போதகரைப் பார்த்து "உன் பிரசங்கத்தை நிறுத்து என்று கட்டளையிடுகிறேன்" என்றான். அவனை உற்றுப் பார்த்த போதகர் அவனைப் பார்த்து, "கடவுளின் ஊழியனாக என் வேலையை நான் செய்கிறேன்; சிப்பாயாக உன் வேலையை நீ செய்" என்று சொல்லிவிட்டுத் தன் பிரசங்கத்தைத் தொடர்ந்தார். சிப்பாயும் போதகரைச் சுடுவதற்காகக் குறி பார்த்தவன், திடீரென தூக்கின துப்பாக்கியை இறுக்கிப் பிடித்து மடமட வென்று ஆலயத்தை விட்டு வெளியேறினான். காரணம் என்ன? கர்த்தரே அறிவார்.
வேதம் கூறுகிறது, "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; ... ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்". (சங்கீதம் 91: 14, 15). தேவன் ஆபிரகாமிடத்தில் ஈசாக்கைத் தனக்குப் பலியிடும்படி சொன்ன போது, ஆபிரகாம் தேவனுக்காகத் தன் ஒரே மகனை, பாசத்தோடு செல்லமாய் வளர்த்த தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியாகப் போகிறவனை இழந்து போக முன்வந்தான். தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமின் இருதயத்தைப் பார்த்தார். தன்மீதுள்ள அன்பைப் பார்த்தார். தன் ஊழியன் தன்மீதுள்ள அன்பினிமித்தம் தன் ஒரே மகனையே இழக்க முன்வந்த செயலை நினைத்து ஈசாக்கைத் திரும்ப ஆபிரகாமிடமே கொடுத்துவிட்டார். மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்" என்று எபிரேயர் 11 : 19 கூறுகிறது.
இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே! சற்று யோசித்துப் பாருங்கள். தேவனுக்காகவோ, ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளவோ, சுவிசேஷம் சொல்வதற்காகவோ நாம் எதையாவது இழந்திருக்கிறோமா? சுவிசேஷ வேலைக்காக நாம் துணிந்து செல்லுவோம். ஏச்சும் பேச்சும் வாங்கினோர் எத்தனை பேர்? அடி,உதை வாங்கினோர் எத்தனை பேர்? அப்படி வாங்கியிருந்தால் நாம் பாக்கியவான்களே! நாம் இழந்து போனதைக் கர்த்தர் திரும்பத் தருவார். இம்மையிலே துன்பங்களோடே கூட நூறத்தனையான ஆசீர்வாதங்களையும் மறுமையிலே நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்வோம். அல்லேலூயா!
- Mrs. பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் நாம் சந்திக்கும் கிராமங்களில் நாம் நடத்தும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளில் கர்த்தர் நாமம் மகிமைப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864