By Village Missionary Movement
Friday, 22-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 22.11.2024 (Gospel Special)
ஒரு சிறிய தொடக்கம்
"எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை" - 1 கொரி. 1:26
சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு திருச்சபையின் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பாட்டியின் மூலம் நடைபெற்ற மகத்தான காரியத்தை இன்று தியானிப்போம். ஞாயிற்றுக்கிழமை தோறும் பூ விற்றுக் கொண்டிருந்த பாட்டி இடையிடையில் சபை ஆராதனையில் நடைபெறும் பாடல்களையும், வசனங்களையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நாளடைவில் இந்த பாட்டியும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொண்டு சபையில் அங்கத்தினராக மாறினார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பூ விற்பதை நிறுத்திவிட்டு தவறாமல் ஆராதனைகளில் பங்கு பெறுவது இந்த பாட்டிக்கு வழக்கமானது. சில வருடங்களில் வயது முதிர்வினால் மரித்துப் போனார்கள். அவர்கள் ஆதாயம் பண்ணியிருந்த ஆத்துமாக்கள் 12 குடும்பங்களாகும். அந்த 12 குடும்பங்களும் அதே சபையில் ஆராதனையில் பங்கு பெற்று வந்தார்கள். எளிமையாக காணப்பட்ட பாட்டியொருவர் ஆத்தும ஆதாயம் செய்வதில் நமக்கு முன்பாக நல்ல ஒரு மாதிரியாக காணப்படுகின்றார்.
யோவான் சுவிசேஷம் நான்காம் அதிகாரத்தில் சமாரியா பெண் மூலம் நடைபெற்ற அற்புதமான சாட்சியை நாம் வாசிக்க முடியும். சமாரிய பெண் கூறிய வார்த்தைகள் நிமித்தம் அந்த கிராமமே இரட்சிப்புக்குள் வந்தது என்பதை வாசிக்கின்றோம். ஆண்டவர் தமது ஊழிய களத்தில் எளிய நபர்களைக் கொண்டு அரிய பெரிய காரியங்களை செய்திருக்கின்றார். சுவிசேஷ ஊழியம் செய்வதற்கு அதிக தாலந்துகள், கிருபைகள் வேண்டுமென்பதல்ல. தன்னைப் போன்று மற்றவர்களும் இரட்சிக்கப்பட வேண்டுமென்கிற ஆத்துமபாரம் இருந்தாலே போதுமானது.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இந்த செய்தியை வாசிக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றளவு ஆத்தும ஆதாயம் செய்யுங்கள். தனிநபர் சுவிசேஷம் மூலமாக ஒவ்வொருவரையும் கிறிஸ்துவுக்குள் வழி நடத்துங்கள். கைப்பிரதி ஊழியங்கள், சிறுவர் ஊழியம் மற்றும் தங்களால் இயன்ற ஊழியத்தை உங்கள் பகுதியில், எதிரே இருக்கிற கிராமத்தில் துவங்குங்கள். துவக்கம் அற்பமாயிருந்தாலும் முடிவை தேவன் சம்பூரணமாய் மாற்றுவார். ஒரு சிறிய துவக்கத்தை துவங்க இன்றே தீர்மானமெடுங்கள். கர்த்தர் உங்களை சுவிசேஷ ஊழியத்தில் பயன்படுத்துவார். பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆத்துமாக்களுக்கு நேராக வழிநடத்துவாராக.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
மேற்கு வங்க ஊழியங்களில் தேவன் திறந்த வாசலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864