By Village Missionary Movement
Friday, 15-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 15.11.2024 (Gospel Special)
இயேசுவுக்காய் மாண்ட கோதுமைமணி
"…அவர் (இயேசு) அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" - மாற்கு 16:15
இயேசு தாம் உயிர்த்தெழுந்த பின் தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த கட்டளையின்படி அவருடைய சீஷர்கள் இயேசுவைப் பற்றியும், மனம் திரும்புதலை பற்றியும், தேவனுடைய ராஜ்யத்தை குறித்தும் பிரசங்கம் பண்ணத் தொடங்கினார்கள். இதன் நிமித்தமாய் அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள், அவர்களில் அநேகர் துன்பத்தையும், சிறைச்சாலையும், மரணத்தையும் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். பேதுரு, ஸ்தேவான், தோமா, பவுல் என அவர்களுடைய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் பலர் இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு வந்து இயேசுவைப் பற்றி அறிவித்தனர். இவர்கள் இப்படி வராதிருந்தால் இரட்சிப்பு நமக்கு எட்டாகனியாகியிருக்கும்.
கி.பி 1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரபு குடும்பத்தில் பிறந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவனாக தேர்ச்சி பெற்று, 26 வது வயதில் உதவி ஆயராக அருட்பொழிவு பெற்றவர் கனம் தாமஸ் ரேக்லாண்ட் அவர்கள். ஒலி , ஒளியுடன் வெடிக்கும் பட்டாசு உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் கிறிஸ்துவாகிய சுவிசேஷ ஒளியை அறிமுகப்படுத்தியவர் இவரே. ஒருமுறை C.M.S.தென்னிந்திய செயலாளராக பணியாற்றின போது குமரி மாவட்டத்தில் அவர் கண்ட காட்சி அவரை வேதனைப்படுத்தியது. ஒரு வயலில் உழவு, ஏர் ஒன்றில் ஒரு பக்கம் ஒரு எருதும், மறுபக்கம் தாழ்த்தப்பட்ட ஜாதி பிரிவை சார்ந்த ஒரு பெண்ணும் மாட்டப்பட்டிருந்ததை கண்டு, அவள் மாடாக, அடிமையாக நடத்தப்படுவதையும் கண்டவர் அடிமைத்தனத்துக்கு எதிராய் முதல் குரல் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் மிகுந்த அன்பு கொண்டு கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து கொள்ள தன்னை அர்ப்பணித்தார். ஒரு கிராமத்திற்கு சென்ற போது தாகத்துக்கு அங்குள்ள கிணற்று தண்ணீரைக் குடிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. கிறிஸ்தவனுக்கு கிணற்று தண்ணீர் கிடையாது என்பதனால் ஒரு சிறுவன் சிறிது ஆட்டுப்பாலை குடிக்க கொடுத்து அவர் தாகத்தை போக்கினான். தனது பதவியை உதறி விட்டு, மக்களோடு மக்களாய் வாழத் தீர்மானித்தார். கிராமம் கிராமமாக சென்று சுவிசேஷத்தை அறிவித்தார். பிரபு குடும்பத்தில் பிறந்தவர் ஒருநாள் தன் தொப்பியில், ஒரு பெண் ஊற்றும் கூழை வாங்கி குடிக்கும்படி தன்னை தரை மட்டும் தாழ்த்தினார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், ஈஞ்சார், ஏழாயிரம் பண்ணை ஆகிய பகுதிகளில் 25 சபைகளை உருவாக்கியவர். மிக குறுகிய நாட்களிலே நோயினால் பாதிக்கப்பட்டு கி.பி 1858 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாளில் தன்னுடைய 43 வயதில் தேவனுடைய ராஜ்யத்தில் பங்கேற்றார். பிரபுக்களின் கல்லறையில் புதைக்கப்பட வேண்டிய அவர் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைக்கப்பட்டார்.
இவ்வாறு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவரை போன்றவர்கள் தான் இன்றும் சுவிசேஷம் அறிவிக்க தேவையானவர்கள். இயேசுவைப் போல் அன்பும், மனதுருக்கமும், தாழ்மையும் கொண்ட ராக்லாந்து ஐயரை போல் நாமும் சுவிசேஷம் அறிவிக்க அழைக்கப்படுகிறோம். கைபிரதிகள் மூலமும், கிராம ஊழியங்கள் மூலமும் இன்னும் அறிவிக்கப்படாத கிராமங்கள், மக்களிடையே இயேசு இரட்சகரை, அவர் அளிக்கும் பாவ மன்னிப்பைக் கூற நம்மை முழு மனதுடன் அர்ப்பணிப்போமா? ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
அனைத்து தாலுகாவிலும் சங்கிலி தொடர் ஜெபம் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864