By Village Missionary Movement
Monday, 11-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 11.11.2024 (Gospel Special)
யாரைக் கொண்டு?
"…இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்" - ஏசாயா 6:8
பதினேழு வயது நிரம்பிய வாலிபன் காச நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட சூழ்நிலையில் இருந்தார். இனி மரணம் தான், உயிர் பிழைப்பதற்கு வழி இல்லை என்ற நிலைக்கு வந்தார். இந்த வாலிபனை காண அக்கம் பக்கத்தினர், அருகிலுள்ள கிராமத்தினர் என பல்வேறான கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் அனைவரும் வாழ வேண்டிய வயதில் மரணத்தோடு ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறானே என அங்கலாய்த்து புலம்பினர். இந்த சூழ்நிலையில் ஒரு சிறுமி தன்னுடைய கையில் ஒரு புதிய ஏற்பாட்டை எடுத்துக்கொண்டு அந்த வாலிபனைக் காணச் சென்றாள். மருத்துவர்களால் கைவிடப்பட்ட எப்பேர்பட்ட வியாதியாக இருந்தாலும் இயேசுவினால் குணமாக்க முடியும் என்று சொல்லி அந்த வாலிபனிடம் புதிய ஏற்பாட்டைக் கொடுத்து விட முயன்றாள். ஆனால் அவன் அதை வாங்கவே இல்லை. இப்படியாக நான்கு நாட்கள் கழித்து, ஐந்தாவது நாளில் அந்த சிறுமி புதிய ஏற்பாட்டை கொடுத்துவிட்டாள். வாலிபன் புதிய ஏற்பாட்டை வாங்கினவுடன் அதை தூக்கி எறிந்தான். நாட்கள் கடந்தன. வீட்டின் மூலையில் கிடந்த புதிய ஏற்பாட்டை கையில் எடுத்து வாசித்தான். அதில் இயேசுவின் அற்புதமும், அன்பு நிறைந்த போதனையும் இருந்தது. அதை வாசிக்க வாசிக்க ஆறுதலும், சமாதானமும் கிடைத்தது. உடனே முழங்கால்படியிட்டு தன்னை சுகப்படுத்தும்படி ஜெபித்து அற்புதம் பெற்றுக் கொண்டான். அந்த வாலிபன் தான் தென்கொரியாவின் எழுப்புதலுக்கு வித்திட்ட பால் யாங்கி சோ. அவர் இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு தான் மரித்தார். அவர் மரிக்கும்போது அவர் சபையில் விசுவாசிகளின் எண்ணிக்கை 8,30,000.
இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் மோசே. ஆனால் இவரை தேவன் அழைக்கும் போது ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றார். ஆனாலும் கர்த்தர் மோசேயை விடவில்லை. சாக்குப் போக்குச் சொன்ன மோசேயைக் கொண்டுதான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தினார்.
ஆண்டவர் ஒரு சிறுமியைக் கொண்டு அவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் கட்டளையிட்டார். திக்குவாயும் மந்தநாவும் உள்ளவனை தான் கர்த்தர் தெரிந்து கொண்டார். கர்த்தர் தம்முடைய சுவிசேஷம் அறிவிக்கும் பணிக்கு யாரைக் கொண்டாகிலும் கிரியை நடப்பிப்பார். ஆனால் நாம் அவரிடம் சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. யாரிடம் சென்று அவருடைய அன்பை சொல்ல நாம் ஏவப்படுகிறோமோ அவர்களுக்கெல்லாம் சுவிசேஷத்தை அறிவிப்போம். யாரையாவது கொண்டு உம்முடைய வேலையைச் செய்யும் என்று நாம் சொல்ல வேண்டாம். உமக்குச் சித்தமான நபர்களிடம் என்னை அழைத்துச் செல்லும் என்று நாம் நம்மை அவரிடம் அர்ப்பணிக்கும் போது நம்மைக் கொண்டும் கிரியை நடப்பிப்பதற்கு அவர் ஆயத்தம்! யாருக்குத் தெரியும், நீங்கள் சுவிசேஷம் அறிவிக்கும் நபர் இந்திய தேசத்தின் எழுப்புதலுக்கு வித்திடுபவராகவும் இருக்கலாமே!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் உள்ள டியூஷன் சென்டருக்கு வரும் ஆசிரியர்களின் குடும்ப சமாதானத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864