By Village Missionary Movement
Monday, 03-May-2021இன்றைய தியானம்(Tamil) 03-05-2021
தகப்பனின் நேசம்
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” – யோவான் 3:16
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ரிக்வான்பீக்- மேரி தம்பதியினருக்கு மாடிசன் என்ற மகள் பிறந்தாள். அவளுக்கு மூளை மற்றும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதால் அவள் படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ள ரிக் தன் மகளுக்காக நீண்ட நாள் வாழ வேண்டுமென தீர்மானித்து, இந்த கெட்ட பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு ஓட்டப்பந்தயங்களில் பங்கெடுக்க பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார். அதற்கு தன்னுடைய மாற்றுத்திறனாளி மகளையும் ஜோடி சேர்த்துக்கொண்டார். படுக்கையில் கிடக்கும் அவளால் எப்படி ஓட முடியும்? எனவே அவளுக்கென்று விசேஷமான மூன்று சக்கர நாற்காலி, படகு ஆகியவற்றை தயார் செய்தார். ஓடும்போது மூன்று சக்கர நாற்காலியில் அவளை படுக்க வைத்து, அதை தள்ளிக்கொண்டு ஓடுவார். நீந்தும்போது அந்த படகில் அவளை படுக்க வைத்து, படகின் கயிறை தன்னுடன் இணைத்து கொண்டு நீந்துவார். மிதிவண்டி ஓட்டும்போதும் மூன்று சக்கர நாற்காலியை மிதிவண்டியின் பின்பக்கத்தில் இணைத்துக் கொள்வார். இதுவரை இருவரும் சேர்ந்து எழுபதுக்கும் அதிகமான போட்டிகளில் கலந்துள்ளனர். சில நேரங்களில் ஓடும்போது அவளை சுமந்து கொண்டும் ஓடுவார்.
ஒருமுறை மிதிவண்டி, நீச்சல், ஓட்டம் என மூன்றையும் குறிப்பிட்ட தூரம் ஒன்றன்பின் ஒன்றாக செய்ய வேண்டிய போட்டியில் மகளுடன் கலந்து கொண்டார். ஊனமுற்ற மகளுக்கு இவர் காட்டின பரிவையும், கரிசனையையும் பார்த்த பத்திரிக்கையாளர்களும், பார்வையாளர்களும் “இந்த நூற்றாண்டின் சிறந்த தகப்பனார்” என பெயர் சூட்டி, “ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். அப்பொழுது அவர், “என் மகள் வெளியிலுள்ள காற்று வேகமாக அவளது முகத்தில் படுவதையும், தலைமுடி பறந்து முகத்தில் விழுவதையும் அதிகமாக விரும்புவாள். அவள்தான் என்னுடைய இதயம், நான் அவளுடைய காலாக இயங்குகிறேன். என்னை காட்டிலும் அவள்தான் அநேகருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறாள். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல குழுவாக இருக்கிறோம்” என்றார். இந்த உருக்கமான பதில் அநேகருடைய வாழ்க்கையை தொட்டது. உலக பெற்றோராகிய நாம் நம் பிள்ளைகளை இவ்வளவு அதிகமாய் நேசிப்போமானால், பரம தகப்பன் நம்மேல் வைத்திருக்கும் பாசம் எவ்வளவு பெரியதாயிருக்கும்? அவர் தம்முடைய ஒரே பேறான குமாரன் என்றும் பாராமல் நமக்காக அவரை இந்த உலகத்திற்கு அனுப்பி, சிலுவையில் மரிக்க ஒப்புக்கொடுத்தாரே!
அவருடைய அன்புக்கு ஈடாக நாமும் அவரை நேசிக்க வேண்டும் அல்லவா? நாம் அவரை நேசிப்போமானால், “நான் அவளது காலாக இயங்குகிறேன்” என்று அந்த தகப்பன் சொன்னதுபோல நாம் கர்த்தருடைய காலாக, சொல்லப்பட்டிராத இடங்களுக்கு செல்லவும், நாம் அவருடைய வாயாக கஷ்டத்திலும் பாடுகளின் மத்தியிலும் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், வியாதிப்படுக்கையில் இருப்பவர்களுக்கு நம் கைகளினால் உதவிகள் செய்யவும் வேண்டுமல்லவா? அநேகருடைய வாழ்க்கையை தொடுவதற்காக கர்த்தர் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். நம்முடைய அன்பினால், நம்முடைய ஆறுதல் வார்த்தைகளினால் மற்றவர்களை தொடுவோமா? அவர்களை கர்த்தரிடம் கொண்டு வருவோமா? கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றுவோமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரிகள் ஒவ்வொருவரையும் தேவன் தமது இரத்தக்கோட்டைக்குள் மூடி மறைத்து பாதுகாத்துக்கொள்ள ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250