By Village Missionary Movement
Monday, 04-Nov-2024இன்றைய தியானம்(Tamil) 04.11.2024 (Gospel Special)
பந்தயப் பொருள்
"…பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" - பிலிப்பியர் 3:14
உலகத்தின் மக்கள் சாதனைகளை படைக்கும்படிக்கு பலவித போராட்டமான வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். அதற்காக அவர்கள் எந்தவிதமான பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுடைய இலட்சியம் சாதனை படைப்பதே! சிலர் வெற்றி பெறுகிறார்கள். அநேகர் தோல்வியடைந்து விடுகின்றனர். ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றி பெற பவுல் அப்போஸ்தலர் நமக்கு முன்மாதிரியாய் இருக்கிறார். அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அதற்குரிய பலனை பரலோகத்தில் பெறுவதையே இலட்சியமாக கொண்டு செயல்பட்டார். அதற்காக அவர் இழந்ததையும், பட்ட பாடுகளையும் அற்பமாக எண்ணுகிறார். "டெம்போட்ஷேரி" இந்த 14 வயது சிறுவன், இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைய 2000 ஆம் ஆண்டில் முயற்சி செய்தபோது, பனி மலையில் சறுக்கி இரண்டு கையிலும் மொத்தம் ஐந்து விரல்களை இழந்தான். ஆனாலும் தன் இலட்சியத்தை அடையும் வரை, பலமுறை முயற்சித்து, திபெத் நாட்டு எல்லை வழியாக எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறி, மிகக் குறைந்த வயதில் "சிகரம் தொட்ட சிறுவன்" என பெயர் பெற்றார். நாமும் சாதனையாளர் விருதை நித்தியத்தில் பெற, இந்த உலக வாழ்வில் சிலதை இழக்க நேரிடலாம்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளுக்கு ஆவியானவர் சொல்லும்போது, "ஜெயங் கொள்ளுகிறவர்களுக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்கிறார்." (2:7) மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுப்பேன் என்றும் கூறுகிறார்.(2:17) விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன் என்கிறார். (2:28) வெண்வஸ்திரந்தரித்து இயேசுவோடு நடக்கும் பாக்கியம் கிடைக்கும் என்கிறார். (3:4) கிரீடம் உனக்கு வைக்கப்பட்டிருக்கிறது அதை வேறொருவன் எடுத்துக் கொள்ளாதபடி அதை பற்றிக் கொண்டிரு என்கிறார். (3:11) நாம் விடாமுயற்சியோடு செயல்பட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே தேவன் நமக்கென்று வைத்திருப்பதை பெற முடியும்.
நம்முடைய இலக்கு என்ன? அது இந்த உலகத்திற்குரியதல்ல, மறுமைக்குரியது. மறுமையில் ஆத்துமாக்களை அவரண்டை சேர்ப்பது! இந்த சுவிசேஷ ஊழியத்திற்காக நாம் பாடுகளையும் நிந்தைகளையும் அனுபவிக்க ஆயத்தமாயிருப்போம். ஜெயங்கொள்ளுகிறவனுக்கு தேவன் வைத்திருக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்வோம். அநேகரை அதற்கு நேராய் வழிநடத்துவோம். மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டது போல நாமும், அவர் பாதத்தில் அமர்ந்திருந்து அவரின் ஆவியின் பலனை அனுதினமும் பெற்று, அவர் நமக்கு நியமித்திருக்கிற சுவிசேஷ ஊழிய ஓட்டத்தில் பொறுமையோடு ஓடி வெற்றி பெற முயற்சிப்போம். நமது கிரியைக்கு ஏற்ற பலனை கர்த்தரால் பெறுவோம்.
- Bro. செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
25,000 கிராமங்களை சந்திக்கும் திட்டத்தில் இம்மாதம் சந்திக்க இருக்கும் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864