By Village Missionary Movement
Friday, 18-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 18.10.2024
கோபம் அது சோகம்
"உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங் கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்." - பிரசங்கி 7:9
யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாத ஒரு மனிதர் இருந்தார். அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். பலர் எப்படி, எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை. எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று அறிந்து கொள்ள விரும்பினார் அவரது நண்பர் ஒருவர். அவர் அந்த மனிதரிடம் சென்று நீங்கள் எப்படி இவ்வாறு கோபப்படாமல் இருக்க முடிகிறது என்று கேட்டார். அப்போது அந்த மனிதர் அந்த ரகசியத்தை கூறினார். ஒரு ஏரியில் காலியான படகில் தூங்குவது என் வழக்கம். அப்படி ஒருமுறை தூங்கிக் கொண்டு இருக்கும்போது, ஒரு படகு வந்து நான் தூங்கிக் கொண்டிருந்த படகை முட்டியது. என்னுடைய தூக்கமும் கலைந்து இப்படி அஜாக்கிரதையாய் படகை முட்டிவிட்டது யார்? என்று கோபமாக கண்களை திறந்து பார்த்தால், அது ஒரு வெற்று படகு. காற்றுக்கு அசைந்து, அசைந்து வந்து நான் தூங்கிக் கொண்டிருந்த படகின் மீது மோதி இருக்கிறது. என்னுடைய கோபத்தை அந்த படகின் மீது காட்டினால் என்ன பிரயோஜனம்? அதன் பிறகு யாராவது என்னை கோபப்படுத்தினால் எனக்கு அந்த சம்பவம் தான் நினைவுக்கு வரும். இதுவும் வெற்று படகு தான் என்று எண்ணி அமைதியாகி விடுவேன் என்று கூறினார். நண்பரும் அதை எண்ணி நெகிழ்ந்தார்.
வேதத்தில் கூட நாபால் என்ற மனிதனின் கோபம் நிறைந்த, மோசமான குணத்தினால் பாதிக்கப்பட்டவர் தாவீது. இதனால் தாவீது தன்னுடைய படைகளோடு கூட நாபாலைக் கொலை செய்ய வருகிறார். அப்பொழுது நாபாலின் மனைவி அபிகாயில் புத்தியாய் செயல்பட்டு தாவீதின் கோபத்தை தணிக்கிறார். இதனால் பெரும் ரத்தப்பழியிலிருந்து தாவீது காப்பாற்றப்பட்டார் என்று பார்க்கிறோம்.
ஆம், பிரியமானவர்களே! அநேக நேரங்களில் நாம் கோபப்பட்டதின் மூலம் நம்முடைய ஆசீர்வாதங்களை இழந்திருக்கிறோம். எனவே மனிதர்கள் நம்மை வார்த்தையினாலே தூசித்து, காயப்படுத்தினால் நாம் கிறிஸ்துவின் உபதேசத்தின்படி சகித்தே ஆக வேண்டும். வேதம் கூறுகிறது உன் மனதில் சீக்கிரமாய் கோபம் கொள்ளாதே, மூடரின் நெஞ்சில் கோபம் குடிகொள்ளும் என்று. ஆம், நமது முற்கோபத்தினால் அநேக சிநேகிதர்களை இழந்திருக்கலாம். கோப குணத்தை மாற்ற தேவனுடைய ஒத்தாசையை நாடுவோம். உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் என்று இயேசு சொன்னாரே. இதுதான் இயேசு காட்டிய மாதிரி. அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட நாம் அவரது மாதிரியைப் பின்பற்ற வேண்டும். எனவே நாம் நம்மை ஆராய்ந்து அறிவோம். தேவனுக்கு முன்பாக கரையற்றவர்களும், பிழையற்றவர்களுமாகக் காணப்படுவோம். ஆமென்!
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
நம் சிறுவர் முகாமில் கலந்து கொண்ட சிறுவர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864