By Village Missionary Movement
Saturday, 01-May-2021இன்றைய தியானம்(Tamil) 01-05-2021
பாதுகாக்கும் தேவன்
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்;…” – ஏசாயா 41:10
கடந்த வருடத்தின் அநேக மாதங்கள் நாம் கொரோனா என்ற கொள்ளை நோயின் ஆபத்து அதனிமித்தம் ஊரடங்கு, பொருளாதார சீர்குலைவுகள் போன்ற பெரிய பாதிப்புகளைச் சந்தித்து கடந்து வந்தோம். மீண்டும் கொரோனாவின் 2ம் அலை, 3ம் அலை என உலகையே இக்கொள்ளை நோய் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எப்பொழுது இந்த பாதிப்பு முடிவுக்கு வரும்? அடுத்து என்ன நடக்கும் என்ற பயம் மனுக்குலத்தை வாட்டுகிறது.
மீண்டும் ஊரடங்கா? என மக்கள் திகைக்கின்றனர். இன்னும் சில வருடங்கள் இக்கொள்ளை நோய் இருக்கத்தான் செய்யும், இதோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்றும் சொல்லப்படுகிறது. தடுப்பூசி, முகக்கவசம் மற்ற பாதுகாப்பு விதிகளை அரசு கடுமையாக மேற்கொள்ள வலியுறுத்துகிறது. ஆனாலும் மக்களிடையே ஒரு வித பீதியும், கவலையும் எங்கள் வாழ்க்கை என்னவாகுமோ? என்ற பயமும், எப்பொழுது நாடு சகஜ நிலைக்குத் திரும்பும் என்ற அச்சம், மன அழுத்தம், டென்ஷன் காணப்படத்தான் செய்கிறது.
உலகையே கைப்பற்ற விரும்பிய நெப்போலியன், தன் கடைசிக்காலத்தில் பிரிட்டனிடம் தோல்வியுற்று, இராணுவத்தினரால் ஆப்பிரிக்கச் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார். மிகுந்த மன உளைச்சலில் தன் நாட்களை தனிமையில் கழித்தார். அவரைச் சந்திக்க வந்த நண்பர் ஒருவர், சதுரங்க அட்டை ஒன்றை கொடுத்து, “இது உங்கள் சிந்தனையை தூண்டி செயல்படவைக்கும்” என ஆறுதல் கூறினார். மிகுந்த மன அழுத்தம், டென்ஷனில் இருந்த நெப்போலியன் அதை பொருட்படுத்தவில்லை. சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பிற்காலத்தில் பிரான்ஸ் நாட்டு அருங்காட்சியகம் அந்த சதுரங்க அட்டையை பொது மக்கள் முன்னிலையில் ஏலமிடத் தயார்படுத்தியது. அதை ஆய்வு செய்தபோது அதன் நடுப்பக்கத்தில் சிறைச்சாலையிலிருந்து தப்புவதற்கான குறிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மன உளைச்சலும், பதட்டமும் நெப்போலியனின் சிந்தையை செயல்படாமல் தடுத்தது.
நம் தேவாதி தேவன் நம் கரங்களிலே விலையேறப்பெற்ற வேதாகமத்தை பாதுகாப்பு கவசமாக நமக்கு தந்துள்ளார். கவலை, பயம், பதட்டம், மன உளைச்சலினால் அதைத் திறந்து வாசிக்க மறந்து விடாதீர்கள். எனக்கன்பானவர்களே! வேத வார்த்தைகள் நமக்கு மாமருந்து! பாதுகாப்பு, சுகம், ஆரோக்கியம் அனைத்தையும் உள்ளடக்கியது. எனவே தினந்தோறும் வேதத்தை நேசித்து, வாசித்து, தியானித்து சுவாசிப்போம். இக்கொள்ளை நோயை குறித்து பயம், டென்ஷன் வேண்டாம். பாதுகாக்கும் தேவன் உங்களோடும், உங்கள் குடும்பத்தினருடனும் இருக்கிறார், தேவப்பிரசன்னம் உங்களை மூடிக்கொள்ளும். ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறுகிற ஊழியங்களில் தேவன் தமது வல்லமையை விளங்கப்பண்ண ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250