By Village Missionary Movement
Thursday, 03-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 03.10.2024
திரியேகரின் ஆசீர்வாதங்கள்
"கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்" - 2 கொரிந்தியர் 13:14
வேதத்தின் படி, "ஒரே தேவன்" என்ற சொல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைத் தனித்தனியாகக் குறிக்கிறது. எனவே நம் தேவன் திரியேகர் எனப்படுகிறார். மேற்கண்ட வசனம் திரியேக தேவனின் ஆசீர்வாத ஜெபமாக உலகெங்கும் ஒவ்வொரு ஆராதனை முடிவிலும், ஜெப கூட்டங்களின் முடிவிலும் ஏறெடுக்கப்படுகிறது. இந்த ஆசீர்வாத ஜெபத்திற்கு அநேகர் முக்கியத்துவம் கொடுக்காமல், கலைந்து செல்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதை நாம் சரி செய்ய வேண்டும். திரியேக தேவனை விசுவாசிக்கிறோம் என்பதை அறிக்கையிட்டு, திரியேக தேவனின் ஆசீர்வாதத்தை பெற்று செல்வதில் கவனமாயிருப்போம்.
தேவன் நம்முடைய பரம பிதா. அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையான யாவற்றையும், தேவையான யாவற்றையும் தருகிறார். இரங்குகிறார், பாதுகாக்கிறார், வழி நடத்துகிறார், சுமக்கிறார், ஏந்துகிறார், தப்புவிக்கிறார், தம்முடைய ராஜ்ஜியத்தைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். இந்த தேவனுடைய அன்பு எத்தனை பெரியது! அதை நாம் அலட்சியப்படுத்தலாமா? குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையால் நமக்கு இரட்சிப்பு கிடைக்கிறது. அவருடைய கிருபையினாலேயே நாம் முடிவு பரியந்தம் இரட்சிப்பில் நிலைத்திருக்க முடியும். எனவே அளவற்ற அவரது கிருபை ஜீவனைப் பார்க்கிலும் மேலானது. இந்த கிருபையை நாம் இழக்கலாமா?
அடுத்ததாக, பரிசுத்த ஆவியானவர், இரட்சிப்புக்கு நேராக நம்மை வழி நடத்துகிறவர். நம்மை பரிசுத்தப்படுத்துகிறவர், நமக்கு போதிக்கிறவர், ஞானம், உணர்வு, ஆலோசனை, பெலன், அறிவு, கர்த்தருக்கு பயப்படும் பயம் ஆகியவற்றை அருளுகிறவர். நம்மை சுத்திகரித்து, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய செய்கிறவர். நம்மோடு பேசுகிறவர், ஊழியம் செய்ய பெலப்படுத்துகிறவர், வரங்கள், வல்லமைகளை கொடுக்கிறவர். வழிநடத்துகிறவர். அவரது பிரசன்னம் நமக்கு எவ்வளவாக அவசியம்?
பிரியமானவர்களே ! இனிவரும் நாட்களில் இந்த ஆசிர்வாத ஜெபம் ஏறெடுக்கப்படும் போதெல்லாம், நாம் அலட்சியமாக இராமல் “திரியேக தேவனே, உம்முடைய அன்பு, கிருபை, ஐக்கியம் என்ற ஆசீர்வாதங்கள் எப்போதும் என்னோடு இருப்பதாக” என்று கருத்துடன் ஜெபித்து கடந்து செல்வோமாக. திரியேக தேவனின் ஆசீர்வாதம் நம்மை நிரப்பி வழிநடத்துவதாக. ஆமென்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
25,000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்க செல்லும் ஊழியர்களின் பிரயாணப்பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864