By Village Missionary Movement
Wednesday, 02-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 02.10.2024
மணவாளன் வந்துவிட்டார்
"…அவர்கள் வாங்கப் போன போது மணவாளன் வந்துவிட்டார்;…" - மத்தேயு 25:10
ஒரு வேலைக்கான இன்டர்வியூக்கு செல்ல வேண்டுமானால், அதற்கான ஆயத்த வேலைகள் அவசியம். படித்த ஆவணங்கள், நகல்கள், அடையாள அட்டை என பல்வேறான கோப்புகளை எடுத்துச் செல்வது மிக முக்கியம். மேலும் ஒரு முக்கியமான நபரை சந்திக்க வேண்டும் என்றால் அந்த நபரை நேரிடையாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், அவர்களுக்கு கீழாக உள்ளவர்களை தொடர்பு கொள்வது, இன்னும் அந்த நபரை சந்திக்க இடம், நேரம், காலஅவகாசம் என எல்லாவற்றையும் பட்டியலிட்டு ஆயத்தப்படுவது வழக்கமான ஒன்று. இது சாதாரணமாக உலகத்தில் நடைபெறுகின்ற ஆயத்த பணிகள். இதே போலவே, வானத்தையும், பூமியையும் தம்முடைய வார்த்தையாலே படைத்த தேவனை சந்திக்க ஒரு நாள் நிச்சயம் வரும்.
வேதத்திலே மணவாளனை சந்திக்க இருவிதமான கூட்டத்தார் ஆயத்தமாய் இருந்தனர். அக்கூட்டத்தினரில் 5 பேர் புத்தியுள்ளவர்கள், மற்ற 5 பேர் புத்தியில்லாதவர்கள். புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுகூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் எடுத்துக் கொண்டு போனார்கள். புத்தி இல்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டு போனார்கள். எண்ணையையோ கூட கொண்டு போகவில்லை. நடுராத்திரியிலே இதோ மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அந்நேரத்தில் புத்தியில்லாதவர்கள் புத்திள்ளவர்களை நோக்கி உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் அவர்களை விற்கிறவர்களிடத்தில் போய் வாங்கிக்கொள்ளும்படி கூறினர். எனவே, ஆயத்தமாக இருந்தவர்கள் கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்.
பிரியமானவர்களே! இந்த இரு விதமான கூட்டங்களில் நாம் யாரைப் போல இருக்கிறோம்? ஆயத்தமாகி பரிசுத்தத்தோடு காணப்படுவோமானால் மணவாளனோடு சென்று விடுவோம். அல்லது நாளைக்கு என்று பரிசுத்தத்தை தள்ளிப்போட்டு விட்டு, நான் யார் தெரியுமா? நான் 50 வருட விசுவாசி, நான் ஊழியக்காரன், நான் திருச்சபைக்கு அதிகமான காணிக்கை கொடுப்பதில் முதலாவதானவன், திருச்சபையில் பெரிய பதவி வகிக்கிறேன் என்றெல்லாம் சொல்லி ஆயத்தமாகி விட முடியாது. மாறாக நாம் பரிசுத்தமாய் இருந்தால் மாத்திரமே மணவாளன் வரும்போது அவரோடு கூட செல்ல முடியும். எனவே அனுதினமும் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்வோம். பரிசுத்தரோடு பரலோகம் செல்வோம். அல்லேலூயா!
- Bro. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
25,000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்க தேவன் திறந்த வாசலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864