By Village Missionary Movement
Sunday, 29-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 29.09.2024 (Kids Special)
சிட்டுக்குருவி
"ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்... அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்…" - மத். 6:26
ஊருக்கு அப்பால் உள்ள காட்டுப் பகுதியிலே ராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை ஊருக்குள் வந்துதான் வாங்க முடியும். அவர் அங்குள்ள மரங்களை வெட்டி அவைகளை விற்று தனது பிழைப்பை நடத்தி வந்தார். அக்காட்டில் அழகிய சிட்டுக்குருவிகள் கூடுகட்டி சந்தோஷமாய் வாழ்ந்து வந்தன. இந்த குருவிகள் அதிகாலமே எழுந்து தங்களது பாஷைகளில் தேவனைத்துதிக்கும். இந்தக் குருவிகளின் சத்தத்தை கேட்டுத்தான் ராஜன் குடும்பத்தினர் எழும்புவார்கள். பகலில் தாய்க்குருவிகள் வெளியே சென்று இரை தேடிக் கொண்டு சாயங்கால வேளையில் தனது குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்வதை அவர்கள் ஒவ்வொரு நாளும் கண்டு ரசித்து வந்தனர்.
ஒரு நாள் அந்த காட்டில் பயங்கர காற்றுடன் மழை பெய்தது. குருவிக் கூடுகளெல்லாம் பிய்ந்து போய் விட்டது. வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை. ராஜனுக்கு மரமும் வெட்ட முடியவில்லை. அடுத்த நாளுக்கு என்ன செய்யப் போகிறோமோ என்ற கவலையும் வந்துவிட்டது. மறுநாள் காலை கைகள் இரண்டையும் கன்னத்தில் வைத்தவாறு கவலையோடு தனது வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தார் ராஜன். அப்பொழுது அந்த சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் போல சந்தோஷமாய் பாடிக்கொண்டு பறந்து திரிந்தன. உடனே ராஜனுக்கு ஒரு சந்தேகம். இந்த சிட்டுக்குருவிகளுக்கு இருக்கக்கூட கூடு இல்லை. சாப்பிடவும் ஆகாரம் இல்லை. அப்படியிருந்தும் எப்படி இவ்வளவு சந்தோஷமாய் இருக்கின்றன என்று எண்ணி வியந்தார். மழையடிக்கும் இந்தக் காலத்திலும் அவைகளை இயேசு சுவாமி போஷித்து பராமரிக்கிறார். அப்படியிருக்கும்போது அவைகளைக் காட்டிலும் நான் விசேஷமானவன் அல்லவா? ஆகவே இந்த சிட்டுக் குருவிகளை போஷிக்கிற ஆண்டவர் என்னை போஷிக்க மாட்டாரா? வேதத்தை அறிந்தும் முட்டாளாய் இருக்கிறேனே என்று எண்ணியவாறே விசுவாசத்தோடு வீட்டிற்குள் நுழைந்தார்.
அன்பான தம்பி-தங்கச்சி, நீயும் கூட உன் குடும்ப காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறாய் அல்லவா? கவலைப்படுவதினால் சரீரத்தில் ஒரு முழத்தைக் கூட்டமுடியுமா என்ன? இப்படி கவலை வரும்பொழுதெல்லாம் வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார். பூத்துக் குலுங்கும் பூக்களைப் பார். அவைகளை அழகாய் உடுத்துவித்து போஷிப்பவர் உன்னையும் குறைவின்றி நடத்துவார், கலங்காதே. படிக்க முடியவில்லையே, ஞாபசக்தி இல்லையே என்று புலம்புகிறாயா? இயேசுவிடம் விசுவாசத்தோடு கேள், உனக்கும் எல்லாவற்றையும் தருவார்.
- Mrs. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864