By Village Missionary Movement
Thursday, 29-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 29-04-2021
பேச்சிலல்ல செயலில்
“தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.” -1கொரிந்தியர் 4:20
ஒரு கிராமத்தில் வசித்த பக்தியுள்ள ஒரு சகோதரன் தேவனுக்கு சாட்சி பகரும் விதமாக தன் சட்டையில் முன்னும் பின்னும் வசன அட்டைகளைத் தொங்கவிட்டு சாலையில் செல்வார். இதினிமித்தம் அந்த கிராமத்தில் பல இடங்களிலும் இவரை பைத்தியம் என்று அழைத்தனர். சில வருடங்களுக்குப் பின் வசனங்களுக்குப் பதிலாக தன் சட்டையின் முன்பகுதியில் “நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்” என்ற வாக்கியத்தைப் பெரிதாக எழுதியிருந்தார். சட்டையின் பின்புறத்தில் “நீங்கள் யாருக்குப் பைத்தியம்” என்ற வாசகத்தை பெரிதாக எழுதியிருந்தார். இப்போது அவரைக் கேலி செய்தவர்களால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவ்வூர் மக்கள் சிந்திக்கலாயினர். அவர் தன் சட்டையில் தொங்கவிட்ட வசனத்தின் படியாய் வாழ்ந்ததை கண்ணார கண்டு பலர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தனர்.
பவுலும் தேவனைப் பற்றி அறிவிக்கும் போது சில இடங்களில் அவரை பைத்தியக்காரன் என்ற பட்டத்தைச் சூட்டினர். ஆனால் அது அவரை மனமடியச் செய்யவில்லை. பவுல் எதனை மக்களுக்கு அறிவித்தாரோ அதன்படியே அவரும் வாழ்ந்தார். அதனாலேயே அவர் அநேக நிருபங்களை எழுத முடிந்தது, அநேக இடங்களுக்கு சென்று சுவிசேஷத்தை அறிவிக்க முடிந்தது. அதேப்போல சாமுவேலும் கூட தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அப்படியே வாழ்ந்து வந்தார். அவர் பெரிய தீர்க்கதரிசியாய் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆலோசனை கூறி நடத்தி வந்தார். மேலும் அவர் முதிர் வயதான போது நான் அநியாயஞ் செய்யவில்லை, இடுக்கண் செய்யவில்லை, குற்றம் ஒன்றும் உம்மில் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரவேலர் சாமுவேலைப் பற்றி சாட்சி கொடுத்தனர். அவன் வாழ்வைக் கண்டு இஸ்ரவேல் ஜனங்கள் சாமுவேலின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தனர், ராஜாக்கள் கூட கீழ்ப்படிந்தனர். சாமுவேலின் வார்த்தை கர்த்தரின் வார்த்தை என்பதை நம்பினர்.
பிரியமானவர்களே! வார்த்தையை விட செயல் மதிப்பு மிக்கது. நீங்கள் பேசுகிறவர்களாக இல்லாமல் செயல்படுகிறவர்களாக, வாழ்ந்து காண்பிக்கிறவர்களாக இருங்கள். சீஷர்கள் கிறிஸ்துவைப் போல் வாழத் தொடங்கிய போது தான் கிறிஸ்தவர்கள் என்ற பேர் வந்தது. இயேசுவும் பேசுகிறவராக அல்ல, முன் மாதிரியாய் வாழ்ந்து காண்பித்து சென்றார். உங்கள் வாழ்வை கண்டு அருகில் உள்ளவர்கள், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நீங்கள் கிறிஸ்தவர்கள் என சாட்சி கொடுப்பார்களா? சிந்திப்போம். பரலோகத்தில் நம் கிரியைகளுக்கு தான் பலன், நம் செயல்தான் பேசும். நம் நடக்கையில் கவனம் உள்ளவர்களாக இருப்போம். நம்மை பார்க்கும் கண்கள் நம்மில் கிறிஸ்துவை காணட்டும். கேட்கிற செவி அல்ல நம்மை பார்க்கும் கண்கள் கிறிஸ்துவை காணட்டும்.
- Y. குணசீலன்
ஜெபக்குறிப்பு:
அடிமைத்தனத்தில் Peace Centre ல் உள்ள மக்கள் விடுதலை பெற்று செல்ல ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250