By Village Missionary Movement
Tuesday, 24-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 24.09.2024
மனத்தாழ்மை
"…மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல், வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்…" - மீகா 6:8
ஷம்லி ஜோ கம்போடியாவில் மிஷனெரி ஆக பணியாற்றிய சகோதரி. அவர்கள் நன்கு படித்த திறமையான பிசியோதெரபிஸ்ட். வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கம்போடியாவில் ஒரு குடிசை அமைத்து அதிலிருந்து மருத்துவ பணியை துவங்கினாள். மேலும் யுத்தத்தில் கை, கால் இழந்த போர் வீரர்களுக்கு சேவை செய்து அப்படியே சுவிசேஷம் அறிவித்தார். அவசர காலத்தில் ஷம்லி-யை வீரர்களின் புண்களை துடைத்து பேண்டேஜ் போட சொன்னார்கள். இவர்கள் நான் ஒரு பிசியோதெரபிஸ்ட் என்று சொல்லாமல், மேலதிகாரிகளுக்கு பயந்து அல்ல மனதாழ்மையாய் அப்பணியை மனமுவந்து செய்தார். ஆம், தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் காரியம் அல்லது தேவன் விரும்பும் காரியம் மனத்தாழ்மை! மற்றவருக்குப் பயந்து அல்லது மற்றவர்களைப் பிரியப்படுத்துவதற்காகத் தாழ்மையாய் இல்லாமல் மனப்பூர்வமாய் உண்மையாய் மனதிலிருந்து தாழ்மையாக இருப்பதே மனதாழ்மை!
இப்படி மனத்தாழ்மையாய் இயேசு கிறிஸ்து வாழ்ந்து காண்பித்துள்ளார். மனுகுலத்தின் மீட்பின் திட்டத்திற்காய் பரலோக வாழ்வைத் துறந்து மனு உருவெடுத்துப் பிறந்தார். பூமியில் வாழும் நாட்களிலெல்லாம் முழு மனிதனாய் வாழ்ந்தார். மிகவும் எளிய வாழ்க்கை, கடினமான சூழ்நிலைகள் எல்லாவற்றையும் இஷ்டப்பட்டு சகித்து வாழ்ந்தார். இறுதியில் சிலுவையில் இகழப்பட்டு, துப்பப்பட்டு வாரினால் அடிபட்டு, தனித்து விடப்பட்டு, சிலுவை மரத்தில் தொங்கி மரித்தார். அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். இவ்வளவாக நம்மை தாழ்த்த வேண்டும். ஏனெனில் நாம் தாழ்விலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் (மண்). ஆனால் அநேக நேரங்களில் உருவாக்கப்பட்ட இடத்தை மறந்து விண்ணுர உயர்த்துகிறோம். நாம் மண்ணென்று தேவன் நினைவு கூறுகிறார். நாமும் அவ்வாறு நினைக்கும் போது உயர்த்தி பெருமை பட வாய்ப்பு இல்லாமல் போகும். நாம் நம்மைத் தாழ்த்தும் போது அப்படியே விட்டுவிடுகிற தேவன் அல்ல. அவர் நமக்கு கிருபையளிக்கிறார். தாழ்மையுள்ளவர்களை நோக்கி பார்க்கிறார்.
இதை வாசிக்கும் அன்பரே, விண்ணுலகம் விட்டு வந்த அவரே இவ்வளவாய் தன்னை தாழ்த்தும்போது, மண்ணில் இருந்து உருவாக்கப்பட்ட நாம் எவ்வளவாய் நம்மை தாழ்த்த வேண்டும். நம்மை உயர்த்திய இடங்களுக்காய்த் தேவனிடம் மன்னிப்பு கேட்போம். இனி எல்லா இடங்களிலும் உண்மையாய், மனத் தாழ்மையாய் இருப்போம், தேவனிடம் ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs. பெர்லின் செல்லாபாய்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனை மூலம் அநேகர் அற்புதங்களை சுதந்தரிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864