By Village Missionary Movement
Thursday, 19-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 19.09.2024
குயவனின் கரம்
"…உடைந்த பாத்திரத்தைப் போலானேன்" - சங்கீதம் 31:12
ஜப்பானில் விலையுர்ந்த கண்ணாடி மற்றும் மண் பாத்திரங்களை அவர்களின் பிள்ளைகள் தெரியாமல் தரையில் போட்டு உடைத்து விட்டால் அந்தப் பிள்ளைகளை திட்டவோ, உடைந்த துண்டுகளை குப்பையிலோ போட மாட்டார்கள். உடைந்த ஒவ்வொரு துண்டுகளையும் கவனமாக ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து அவற்றை உடைந்த பானைகளை நல்ல பாண்டமாக அசலை போலவே மீண்டும் ஒட்ட வைக்கும் ஒரு கலைஞரிடம் எடுத்துச் செல்வார்கள். இந்த கலைக்கு பெயர் "கிண்ட்சுகி". அந்த கலைஞர் அந்த உடைந்த பானையை மீண்டும் அரக்கு போட்டு, அதன் பழைய வடிவை ஒட்டவைத்து, அரக்கு பூசிய இடங்களில் ஒருவித பொடியை போட்டு நிரப்பி, அசலை போலவே ஒட்டவைத்து கொடுப்பார். ஒட்டப்பட்ட பானைகள் மிகவும் அழகாக முன்பை விட மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்கும். அந்தப் பானையை அவர்கள் வீட்டில் மிகவும் சிறப்பான இடத்தில் வைப்பார்கள்.
எரேமியா 18 ஆம் அதிகாரத்தில் ஒரு குயவன் கையினால் செய்யப்பட்ட ஒரு மண்பானை கெட்டுப் போயிற்று. அந்தக் குயவன் அந்தப் பானையை வேற பாண்டமாக வனைந்தான். இன்றும் இதை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் என் வாழ்வு முடிந்தது என்று அங்கலாய்த்து கொண்டிருக்கலாம். என் திருமண வாழ்வு முறிந்து விட்டது, என்னுடைய படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாமல் வழி தெரியாமல் தவிக்கிறேன், அரசு வேலைக்கும், வெளிநாட்டு வேலைக்கும் பலமுறை முயற்சி செய்து, தோல்வியடைந்து உடைந்து போய் காணப்படுகிறேன். என்னுடைய எதிர்காலம் என்ன? இனி என்னால் வாழ முடியுமா? வாழ்வில் உயர முடியுமா? என்று உடைந்த உள்ளத்தோடும், கண்களில் கண்ணீரோடும், மனதில் பாரத்தோடு இருக்கலாம். கலங்காதீர்கள், பரமகுயவனாம் ஆண்டவரின் கையில் உங்களை அர்பணித்துவிடுங்கள்.
இதை வாசிக்கும் அன்பு தேவப்பிள்ளையே! உங்கள் வாழ்வை தேவனுடைய கரத்தில் ஒப்பு கொடுங்கள். ‘கிண்ட்சுகி’ என்ற கலைஞர் கரத்திற்கு சென்ற உடைந்த பொருள் மிகவும் அழகான, விலையேறப்பெற்ற, பிரயோஜனமான பொருளாக மாறியது. அதைப் போல பரம தகப்பன் கரத்தில் நம்முடைய உடைந்த வாழ்வை ஒப்படைக்கும் போது அநேகர் பார்த்து ஆச்சரியப்படும் வண்ணமாக உருவாக்கி, உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஆகவே கலங்காதீர்கள், தாமதிக்காதீர்கள் தேவனிடம் தீவிரமாய் சென்று உங்கள் வாழ்வை அர்ப்பணித்து விடுங்கள். "ஆண்டவரே நான் உடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறேன். என் வாழ்வை சீரமைக்க எந்த மனிதனாலும் முடியாது, என்னாலும் முடியாது, நீர் மாத்திரமே அதை செய்து முடிக்க முடியும். என்னைத் தருகிறேன்" என்று ஜெபித்துப் பாருங்கள். அற்புதத்தைக் காண்பீர்கள்.
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியத்தை தாங்கும் பங்காளர்களின் குடும்பப் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864