By Village Missionary Movement
Wednesday, 28-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 28-04-2021
பிரகாசித்திடு
“எழும்பு, எழும்பு,… உன் வல்லமையைத் தரித்துக்கொள்;…” - ஏசாயா 52:1
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த சகோதரி இந்தியாவைக் குறித்த பாரத்தினால் அழுத்தப்பட்டு பீகாரிலுள்ள ஜெம்ஸ் மிஷனெரி ஸ்தலத்தில் ஊழியம் செய்யும்படி வந்தார்கள். அவர்களுக்கு பிரெஞ்சு மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத காரணத்தினால் அவர்களால் வேறு எந்த ஊழியமும் செய்ய முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தவர்கள் ஒரு நாள் அந்த மிஷன் அலுவலகத்தில் உள்ள எல்லாக் கழிவறைகளையும் கழுவக்கூடிய பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாய் சொல்ல, அதற்கு அங்குள்ளவர்கள் மறுப்பு தெரிவிக்க, கர்த்தருக்காக இந்த ஊழியத்தையாவது நான் செய்கிறேன் என்று விருப்பத்துடன் அதை செய்தார்கள்.
ஒருமுறை அங்குள்ள மலை கிராமத்திற்கு குழுவாக ஊழியம் செய்யச் சென்றபோது அவர்களுடன் இந்த சகோதரியும் செல்ல, இரவு கிராமத்துக்கு வெளியே வைக்கோல் போரில் படுத்துறங்க நேரிட்டது. காலையில் எழுந்தவுடன் நான் பிரான்ஸ் தேசத்தில் இருந்த போது கர்த்தர் எனக்குக் காண்பித்த இடம் இதுவே என்று சொல்லி தொடர்ந்து அந்த மலை கிராமத்தில் தங்கி ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். அங்கு குளிக்கவும், குடிக்கவும் அங்குள்ள ஒரே ஒரு குளத்தின் தண்ணீர் மாத்திரமே இருந்தது. அங்குள்ள தண்ணீரும் சூழ்நிலையும் ஒத்துக்கொள்ளாமல், ஒரு வாரத்திற்குள்ளாக வியாதிப்பட்டு மரித்தும்போனார்கள். அவர்களைக் குறித்து சொல்லப்பட்ட சாட்சி என்னவென்றால், மிஷன் அலுவலகத்தில் அனைவரும் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென்று தேவ பிரசன்னமும் தேவமகிமையும் அவர்களை மூடும். காரணம் என்னவென்றால் இந்த சகோதரி அங்கே வருவார்களாம். இவ்வாறாக தேவமகிமையையும், தேவ பிரசன்னத்தையும் சுமந்துகொண்டு, தேவன் மேலுள்ள அன்பினால் தன்னுடைய தேசத்தையும் விட்டு, தேவன் காட்டிய இடத்துக்கு வந்து கோதுமை மணியாய் விதைக்கப்பட்டார்கள்.
மோசே 40 நாள் தேவ சமுகத்தில் காத்திருந்து தேவதிட்டங்களை பெற்றுக்கொண்டு வந்தபோது அவன் முகம் தேவமகிமையால் பிரகாசித்தது. அதேபோல “பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன.” (அப்.19: 11,12) காரணம் என்ன? இவர்கள் தேவ மகிமையையும், தேவபிரசன்னத்தையும் சுமக்கிறவர்களாகவும், மற்றவர்களிடம் அதை கடத்துகிறவர்களாகவும் காணப்பட்டார்கள்.
நாம் எவ்வாறு காணப்படுகிறோம்? பலவித பிரச்சனைகளையும், கவலைகளையும் சுமந்து கொண்டு, நாளை என்ன செய்யலாம் என்று தத்தளிக்கும் மனதுடன் தவிப்புடன் காணப்படுகிறோமா? தேவனுடைய சமுகத்தில் நம் பாரங்களை இறக்கி வைத்துவிட்டு தேவனுடைய வல்லமையை பெற்றவர்களாக, நம்மால் இயன்றதை தேவனுக்காக செய்து அவரது பிரசன்னத்தை சுமந்து திரிகிறவர்களாக வாழலாமே.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
தினமும் அதிகாலை 5 மணிக்கு Jio meet app மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் Online prayer ல் அநேகர் பங்குபெற ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250