By Village Missionary Movement
Monday, 16-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 16.09.2024
ஜெயம்
"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" - 2 கொரிந்தியர் 2:14
யுத்தத்தில் தோல்வியடைந்த ஒரு இளவரசனுக்கு, வெற்றி பெற்ற பேரரசன் ஒரு நிபந்தனையை விதித்தான். தண்ணீர் நிறைந்த கோப்பையை கையில் ஏந்தி, ஒரு சொட்டும் கீழே சிந்தாதபடி தூக்கிக் கொண்டு நடந்து, ஒரு மைலுக்கு அப்பால் இருக்கும் பேரரசரிடம் கொடுத்து விட்டால் யுத்தத்தில் தோற்ற இளவரசனுக்கு விடுதலை என்பதே அந்த நிபந்தனை ஆகும்.
அந்த இளவரசன் கோப்பையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் போது ஒரு சொட்டு தண்ணீர் சிந்தினாலும் அவனை பட்டயத்தால் வெட்டும்படி இரண்டு சேவகர்கள் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள். ஆனால் வழி நெடுக அந்த இளவரசனை உற்சாகப்படுத்தும் படி ஒரு கூட்டத்தையும், அவனைப் பழித்து பேசும்படி ஒரு கூட்டத்தையும், பேரரசன் நிறுத்தியிருந்தான். ஆனால் இளவரசனோ, வலது புறமோ, இடது புறமோ பார்க்காமல் கோப்பையிலேயே தனது முழு கவனத்தையும் வைத்து முடிவிலே விடுதலையை சம்பாதித்துக் கொண்டான். இளவரசனைப் பார்த்து, "உன் வெற்றிக்கு காரணம் என்ன?" என்றபோது நான் என்னை போற்றுவோரையும் கவனிக்கவில்லை, என்னைத் தூற்றுவோரையும் கவனிக்கவில்லை. என் மனம் கோப்பையில் உள்ள தண்ணீரிலேயே இருந்தது. நான் மிக மிக கவனமாக நடந்தேன் என்றான்.
வேதத்திலே, தன் வாழ்வில் எந்த புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒரே விதமாய் எடுத்துக் கொண்டவர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. அவரது முழு கவனமும் பிதாவின் சித்தம் செய்வதே! ஆகவேதான் அவரை ராஜாவாக்க ஒரு கூட்டம் தேடினாலும், கொலை செய்ய இன்னொரு கூட்டம் தேடினாலும் அவரோ என் ராஜ்ஜியம் இவ்வுலகத்திற்கு உரியது அல்ல என தெளிவாய் வாழ்ந்து தேவசித்தம் நிறைவேற்றி முடித்தார்.
அன்பானவர்களே, நம் வாழ்க்கையிலும் பல தோல்விகள், சறுக்கல்கள், வெட்கங்கள், அவமானங்கள் வரத்தான் செய்யும். அவைகளைக் கண்டு சோர்ந்து போகாமல் துணிவுடன் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். நம்மை வீழ்த்த, பின் மாற்றம் அடையச் செய்ய, இயேசுவை மறுதலிக்கும் படி பல தடைகளை பிசாசானவன் கொண்டு வந்தாலும், நாம் அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயிக்க வேண்டும். நம் கவனம் முழுவதும் நான் இயேசுவின் பிள்ளை நான் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவன்(ள்) என்ற எண்ணத்தோடே யாருடைய ஏளனத்தையும், பரியாசத்தையும் கவனிக்காமல் நம் முழு கவனமும் சிலுவையில் வெற்றி சிறந்த இயேசு கிறிஸ்துவின் மேலேயே இருக்கட்டும். இயேசுவை முன் வையுங்கள், ஜெயம் உங்களுக்குத்தான். ஆமென்! ஆமென்! ஆமென்!
- Mrs. எப்சிபா ரவிச்சந்திரன்
ஜெபக்குறிப்பு:
நம்மிடம் பயிற்சியிலுள்ள இளம் மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864