By Village Missionary Movement
Monday, 26-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 26-04-2021
அதிகாலையில் விழித்திருங்கள்
“அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்.” – மாற்கு 1:35
அமெரிக்காவின் 16-ம் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனை பார்த்து ஒரு முக்கியமான காரியத்திற்கு ஆலோசனை பெறும்படி மூத்த அரசு அலுவலர்கள் காலையில் வெகு சீக்கிரமாகவே சென்றனர். அவர் அதிகாலமே எழும்பும் பழக்கமுடையவர் என்பதை அவர்கள் அறிவர். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது. ஆகவே அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர். வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். “ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்துவிட்டோம், நீங்கள் யாருடனோ பேசி கொண்டிருந்தீர்கள், ஆகவே காத்திருந்தோம்” என்றனர். வேறு யாருமல்ல நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன் என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவர்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். “என் பாட்டிதான் அதிகாலையில் எழுந்தவுடன் ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்று கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல் முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்” என்றார். இதுவே திறம்பட அவர் ஆட்சி செய்ய காரணமாயிருந்தது.
இயேசு கிறிஸ்து அதிகாலையில் எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார். இவர் வாழ்ந்த நாட்களில் அதிகாலையில் எழுந்து ஜெபம் பண்ணுகிறவராய் இருந்தார். அதனால்தான் இவர் வெற்றியாய் தன்னுடைய ஊழிய பாதையை நிறைவேற்றி முடித்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முதலில் பிதாவோடு பேசினார். தேவ சித்தத்தை அறிந்து செயல்படுவதே அவரது முதன்மையாய் இருந்தது. எனவே தான் அவர் இருட்டோடே எழுந்தார், ஜெபித்தார். அதிகாலையில் எழுந்து ஜெபித்து நமக்கு எல்லாம் முன்மாதிரியை வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.
இதை வாசிக்கின்றதான அன்பானவர்களே! அதிகாலை ஜெபம் மிகவும் விலையேறப்பெற்றது. நமக்கு அதிகாலையில் எழும்பும் பழக்கம் உண்டா? அப்படி எழுந்தாலும் தேவனைத் தேடுகிறோமா அல்லது செல்போனைத் தேடுகிறோமா? முதலில் யாரோடு பேச விரும்புகிறோம்? சிந்தித்துப் பார்ப்போம். அதிகாலையில் போர்வையை உதறி எழும்புவதிலிருந்தே அந்த நாளின் வெற்றி தொடங்கி விடுகிறது. பல்துலக்கி, முகம் கழுவி ஆயத்தமாய் அவரை சந்திக்க அமருங்கள். அதிகாலையில் தேவனுடன் பேசிவிட்டு மற்ற காரியங்களில் ஈடுபடுவோம். அதிகாலையில் விழித்திடுவோம், அதிகாலை ஜெபத்தில் நிலைத்திடுவோம். நாமும் இந்த உலகத்தை ஜெயித்து, ஜெயம் எடுப்போம்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியத்தை ஜெபத்தால் தாங்கும் பங்காளர்களை தேவன் ஆத்தும பாரத்தினாலும் ஜெப ஆவியினாலும் நிரப்பி பாரத்தோடு ஜெபிக்க வைக்க.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250