By Village Missionary Movement
Tuesday, 27-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 27.08.2024
அறிவியுங்கள்
"…உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்” - மாற்கு 5:19
ஒரு காவல் அதிகாரியின் கையில், "தவறவிட்ட குழந்தை" என்ற சுவிசேஷக் கைப்பிரதி ஒன்று கிடைத்தது. அதில் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகிற்கு கொடுத்த அற்புத செய்தி சொல்லப்பட்டிருந்தது. அதை ஏளனமாக பார்த்த அவர் வழக்கம் போல கசக்கி அதை குப்பைக் கூடையில் எறிந்து விட்டார். அன்று மாலை அவருடைய வீட்டில் இரண்டாவது மாடியில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். மாடியின் முகப்பில் நின்ற அவர் கையில் இருந்த குழந்தை திடீரென துள்ளியது. அவரது இறுக்கமான கையில் இருந்து எப்படியோ நழுவி கீழே விழ ஆரம்பித்தது. உடனே அவரும் கீழே குதித்தார். காவல்துறையின் பயிற்சியினால் குழந்தையை லாவகமாக பிடித்தார். தன்னைக் கீழே கிடத்தி தன் குழந்தையை காப்பாற்றினார். குழந்தை எந்தவித காயமுமின்றி காப்பாற்றப்பட்டது. ஆனால் அவருக்கோ இடது கை, காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை சில சகோதரிகள் மருத்துவமனையில் ஊழியம் செய்ய வந்தனர். அந்த அதிகாரியின் கையில் "தவறவிட்ட குழந்தை" என்ற அதே கைப்பிரதியை கொடுத்து சுவிசேஷம் அறிவித்தனர். இப்பொழுது அவரால் இந்த கைப்பிரதியின் உண்மையை உணர முடிந்தது. பொல்லாதவனாகிய நானே என் பிள்ளைக்காக இதை செய்யும்போது பரிசுத்தமுள்ள தேவன் பாவிகளாகிய நமக்காக மனுஷனாய் இப்புவிக்கு வந்து தன் உயிரைக் கொடுத்தது நிச்சயமான உண்மையே என மனதிற்குள் எண்ணினார். அன்றே இரட்சிக்கப்பட்டார்.
புதிய ஏற்பாட்டில் மாற்கு எழுதின சுவிசேஷ புஸ்தகத்தில் அசுத்த ஆவி பிடித்த மனுஷனை நாம் அறிவோம். அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் இயேசுவை பணிந்து கொண்ட பின்பு, இயேசுவானவர் அந்த அசுத்த ஆவியுள்ள மனுஷனை சுகப்படுத்தினார். இயேசு அவனிடம் நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்கு போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்கு அறிவி என்று சொன்னார்.
எனக்கு அன்பானவர்களே! இந்த அசுத்த ஆவியுள்ள மனுஷனைப் போல நாமும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வியாதிப்பிடியிலோ, அல்லது இயேசுவுக்கு தூரமாகவோ, இயேசு இல்லாமலோ வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் யாரோ ஒருவர் மூலமாக இயேசுவை நாம் அறிந்து கொண்டோம். காரணம் அவர்கள் இயேசுவை நமக்கு அறிவித்தனர். காவல் அதிகாரிக்கு மீண்டும் மீண்டும் சுவிசேஷம் சொல்லப்பட்டதின் விளைவாக இரட்சிக்கப்பட்டார். ஆண்டவர் நம்முடைய வாழ்வை மாற்றி மேன்மேலும் நன்மைகளைச் செய்து ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறார். அவரை அறியாதவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது நம் தலையின்மேல் விழுந்த கடமையல்லவா? நாம் பெற்ற சந்தோஷம் மகிழ்ச்சியை சுவிசேஷமாக அறிவிப்போமா? வாரீர்! சுவிசேஷம் அறிவிப்போம். ஒவ்வொருவரையும் பரலோக பிரஜைகளாக மாற்றுவோம்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
பணித்தளங்களில் ஒருமணிநேர மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864