By Village Missionary Movement
Friday, 23-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 23.08.2024
என்னில் நிலைத்திருங்கள்
"நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" - யோவான் 15:7
வேதாகமமே எளிதாக கிடைக்காத காலத்தில் பதினான்கு வயதே ஆன மேரி ஜோன்ஸ் என்ற சிறுமிக்கு ஆலயத்தின் மேல் வாஞ்சையும், வேதத்தின் மேல் தாகமும் கொண்டாள். தனக்கென்று வேதாகமம் ஒன்று வாங்க பள்ளியில் இருந்து வந்ததும், கோழி முட்டைகளை விற்று, சலவை தொழில் செய்து ஆறு வருடமாக பணத்தை சேகரித்தாள். புதிய வேதாகமம் வாங்க பணத்தை எடுத்துக் கொண்டு கரடுமுரடான மேடு பள்ளங்களுமுள்ள மலைப்பிரதேசத்திற்கு ஐம்பது மைல் தூரம் நடந்து தாமஸ் சார்லஸ் என்ற போதகரிடம் "வேல்ஸ் மொழி" வேதாகமத்தை வாங்கினாள். அதை தான் கற்றுக் கொண்டதுமல்லாமல் தன் கிராம மக்களுக்கும் கற்றுக் கொடுத்து அநேகரை ஆண்டவரண்டைக்கு வழிநடத்தினாள். வேதாகம சங்கம் தோன்றுவதற்கும் அநேக மொழிகளில் வேதாகமம் அச்சிடப்படுவதற்கும் இந்த மேரி ஜோன்ஸ் என்ற சிறுமியே காரணமாக இருந்தாள்.
வேதத்திலும் கூட பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் நற்குணசாலிகளாய் காணப்பட்டார்கள். அதினால் அவர்களில் அநேகம் பேரும், கனம் பொருந்திய கிரேக்கரில் அநேக புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசித்தார்கள். ஆம், நாம் இன்று அநேக தேவமனிதர்களுடைய செய்திகளை சமூக வலைதளங்கள் மூலமாக கேட்கலாம். ஆனால் அவையெல்லாம் வேத வசனத்திற்கு ஒத்திருக்கிறதா என நிதானித்து ஆராய்ந்தால் மாத்திரமே நாம் நிலைத்திருக்கும் கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும். இல்லாவிட்டால் காற்றில் அடிபடும் நாணலைப் போலவே இருப்போம்.
ஆம், பிரியமானவர்களே, நாமும் கூடவேதத்தை வாசிக்க தியானிக்க வாஞ்சையுள்ளவர்களாக இருக்கும் போது கனி கொடுக்கிற வாழ்க்கை வாழ முடியும். தேவனுடைய உபதேசத்தில் நிலைத்திருந்தால் தேவனுடைய சீஷர்களாய் இருப்போம் என்று யோவான் 8:31 ல் வாசிக்கிறோம். முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் என்று வேதம் கூறுகிறது. வேத வசனத்திற்கு செவிசாய்த்து அதின்படி நடக்கிறவர்களே முடிவுபரியந்தம் வாழ முடியும்.
இன்று நாம் செல்போனுக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறோம். வேதத்தை தியானிக்க எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்று கணக்கிட்டுப் பார்த்தோமானால் நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கின்றோமா, இல்லையா? என்பது விளங்கும். நாமும் பெரோயா பட்டணத்தார் போல மேரி ஜோன்ஸ் போல வேதத்தின் மேல் தாகம் கொள்வோம். அநேகரை விசுவாசத்திற்குள் வழி நடத்துவோம்.
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் மருத்துவமனை ஊழியங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவர் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864