By Village Missionary Movement
Monday, 19-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 19.08.2024
பேதுருவின் மாற்றம்
"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை;..." - அப்போஸ்தலர் 4:12
பேதுரு என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, அவர் மூன்று முறை மறுதலித்தார் என்பதுதான். ஆனால் அது, அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவதற்கு முன் நடந்த சம்பவம்! இயேசுவை சேவகர்கள் கைது செய்து பிரதான ஆசாரியர், சதுசேயர், மூப்பர்கள் என ஒவ்வொருவரிடமும் அழைத்துச் சென்ற போதும் பதைபதைப்புடன் பின் சென்றார். காவலிலும், சாவிலும், உம்மைப் பின்பற்றுவேன்,... உமது நிமித்தம் எல்லாரும் இடறல் அடைந்தாலும் நான் இடறலடையேன் என்றவர், இயேசுவானவர் "நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய்" என்ற பின்பும் மறுதலிக்க மாட்டேன் என உறுதியாய் கூறினார். இவை எல்லாம் தம் சுயபலத்தினால் பேதுரு சொன்ன வார்த்தைகள். பெந்தேகோஸ்தே நாளில் 120 பேர் மேல் வீட்டறையில் காத்திருந்தபோது பரிசுத்த ஆவியின் நிரப்புதலை பெற்றவர்களாய் பற்பல பாஷைகள் பேசினார்கள். இதனை கேட்ட பற்பல தேசத்தார், தங்கள் சொந்த பாஷையை கேட்கிறோம் என ஆச்சரியப்பட்டாலும், சிலர் குடித்து, வெறித்து இருக்கிறார்கள் என பரியாசம் பண்ணினார்கள். பேதுருவோ தைரியமாய் எழுந்து நின்று "மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" என்று கூறிய தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறிற்று. நீங்கள் இயேசுவைக் கொலை செய்தீர்கள், ஆனாலும் தேவன் அவரை உயிரோடு எழுப்பினார் என தைரியமாய்க் கூறினார். எப்படி இந்த மாற்றம் வந்தது?
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட பின்பே, இந்த வேத எழுத்துக்களின் ஞானமும், தைரியமும் உண்டானது பேதுருவுக்கு! பேதுருவும், யோவானும் ஆலய வாசலில் பிறவி சப்பாணியை இயேசுவின் நாமத்தில் எழுந்து நடக்கச் செய்த போது, எங்கள் சுய சக்தியோ, சுயபக்தியோ இவனுக்கு சுகம் தரவில்லை இயேசுவின் நாமமே சர்வாங்க சுகத்தைத் தந்தது அதற்கு நாங்களும் சாட்சிகள் என்றார்கள். அதிகாரிகள், பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள் முன்னிலையில் இயேசுவின் நாமத்தை தைரியமாய்ச் சொன்னார்கள். பேதுருவின் வார்த்தைகளை கேட்டு 3000, 5000 பேர் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். யூதர்கள் புறஜாதியினருடன் கலந்து இருக்க மாட்டார்கள் என்றாலும் கொர்நேலியு வீட்டுக்குச் சென்று, நற்செய்தி அறிவித்து, பரிசுத்த ஆவியின் நிறைவை புறஜாதிகளும் பெற்றுக் கொள்ளவும், மரித்த தொற்காள் உயிரடையவும், எட்டு வருடமாக திமிர்வாதகாரனாக இருந்த ஐனேயாவையும் குணமாக்கினார் பேதுரு.
ஆம் பிரியமானவர்களே! மறுதலித்த பேதுரு மிகப்பெரிய அப்போஸ்தலனாய், புற ஜாதிகளுக்குள் இரட்சிப்பைக் கொண்டு வந்தார். இனிமேல் மறுதலித்த பேதுரு என எவரையும் அலட்சியம் பண்ணாமல், குறைவானவர்களையும், பலவீனரையும் தேவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பி எவ்வளவு வல்லமையாய் ஊழியம் செய்ய பயன்படுத்தினார் என்று எண்ணி துதியுங்கள். நாம் எவ்வளவு பலவீனமான பாண்டமாயிருந்தாலும் நம்மையும் தேவனால் பயன்படுத்த முடியும். யாவரையும் கிறிஸ்துவுக்குள் கனம் உள்ளவர்களாய் எண்ணுவோம்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
கண்மணியே கேள் என்ற வாலிப பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி மூலம் அனேக வாலிப பெண் பிள்ளைகள் ஆண்டவரின் அன்பை ருசிக்க, இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864