By Village Missionary Movement
Thursday, 15-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 15.08.2024
பிரபல்யம்
“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?..." - சகரியா4:10
நாளைய தலைவர்களாக மாறப் போகும் இன்றைய வாலிபர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். மானிடர்களுக்கு பதின் பருவம் என்பது விசேஷமானது. இளமையை கடந்து முதிர் வயதில் காணப்படும் ஒவ்வொரு மனிதனும் தன் வாலிப நாட்களை மறப்பதேயில்லை. இவ்வளவு விசேஷமான வாலிப பருவத்தினருக்கு வேதாகமத்திலிருந்து சொல்லப்படுகின்ற செய்தியை இன்று தியானிப்போம்.
உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு என்று பவுலடியார் எழுதுகிறார். பிறர் நம்மை ஏற்றுக் கொண்டாலும் அல்லது நம்மை அவமதித்தாலும் ஆண்டவருக்குள் உறுதியான நம்பிக்கையுடன் வாலிப பருவத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். 1877ம் வருடத்தில் ஒரு நாள் ஆலய ஆராதனையின் போது கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறவர்கள் முன்னால் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ராட்னி ஸ்மித் என்கிற வாலிபன் முன்னே சென்றபோது, இவன் ஒரு நாடோடி என்று யாரோ ஏளனமாக முணுமுணுத்தது அவர் காதில் விழுந்தது. ராட்னியின் பெற்றோரும் கல்வியறிவற்ற நாடோடிகள் தான்; இந்த வாலிபர் பற்றி யாருமே பெரிதாக எண்ணவில்லை. ஆனால் தன்னைக் குறித்து தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டென்பதை ராட்னி நிச்சயமாக அறிந்திருந்தார். ஒரு வேதாகமத்தையும் ஆங்கில அகராதியையும் வாங்கி, வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டார். "இயேசுவிடம் செல்வதற்கான வழி கேம்பிரிட்ஜிலும், ஹார்வர்டிலும் இல்லை. கல்வாரி மலையில் தான் உள்ளது" என்று இவர் ஒரு முறை சொன்னார். எல்லாத் தடைகளையும் தாண்டி ஒரு சுவிசேஷகரானார் ராட்னி. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தின பிரபல தேவ ஊழியர் ஆனார்.
இன்றைய வேத பகுதியில் "அற்பமான ஆரம்பித்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?" என்று எழுதப்பட்டிருக்கிறதை வாசித்தோம். ராட்னி ஸ்மித் என்ற வாலிபனின் அர்ப்பணிப்பு அற்பமாய் பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஊழியம் மகிமையாய் காணப்பட்டது. இதேபோல இன்று மதியம் நாம் நடத்தவிருக்கும் வாலிபர் முகாமிலும் ராட்னி போன்ற அநேக வாலிபர்களை தேவன் அழைத்து வர வேண்டும். அவர்களை இரட்சித்து அவர்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்ய வேண்டும். அங்கு வருகிற வாலிபரின் வாழ்வில் ஒரு ஆவிக்குரிய ஆரம்பம் உண்டாக வேண்டும். அது சாதாரணமானதாய் அற்பமாய் தோன்றலாம். அதுவே மகிமையான வாழ்வுக்கு நேராய் அவர்களை வழிநடத்தும். பாரத்தோடு இம்முகாமிற்காக ஜெபியுங்கள். சுதந்திர இந்தியாவில் வாழ்ந்தாலும் பலவித அடிமைத்தனங்களில் இருக்கும் வாலிபர்களின் அடிமைத்தனங்களையும், சிறையிருப்பையும் மாற்றி விடுதலையோடு ஆண்டவருக்காக எழும்பி பிரகாசிக்கும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் திருச்சியில் இன்று எழும்ப ஜெபியுங்கள்!
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
இன்றைய செய்தியாளர்களான சகோ. மோகன் சி லாசரஸ் மற்றும் சகோ. டேவிட்கணேசன் அவர்கள் தேவனால் பயன்படுத்தப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864