By Village Missionary Movement
Friday, 09-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 09.08.2024
கேள்வி கேட்காத கீழ்ப்படிதல்
“…தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்” - ஆதி. 6:22
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செய்திருந்தார். விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாள் அவர் சொன்ன வேலையைச் செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவது நின்றது. இறுதியில் ஒரு வாலிபன் மட்டுமே வேலைக்கு வந்தான். அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லிக்கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்டச் சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போடச் சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார்.
திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து விட்டான். ஏன்? எதற்கு? என எந்தக் கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையைக் கொடுத்தார். பல லட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும், அவனை நியமித்தார். அவன் உயிருள்ளவரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்க்காப்பாளனாக இருந்தான்.
பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தமாகி நோவா என்ற தேவ மனிதனுடன் பேசுகிறார். தொடர் மழை பெய்யப் போகிறது. அந்த அழிவிலிருந்து உன்னையும், உன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள ஒரு பேழையைச் செய். மழை அதற்கு முன் பூமியிலே பெய்ததா என்பது தெரியவில்லை. ஆனாலும் அது என்ன? ஏன்? எதற்கு? என எந்தக் கேள்வியும் கேட்காமல் நோவா ஒரு இன்ச் கூட்டியோ, குறைத்தோ காட்டாமல் கர்த்தர் சொன்ன அளவின்படியே அவர் சொற்படிக்கீழ்ப்படிந்து பேழையைச் செய்தார். அழிவிலிருந்து அவர் குடும்பம் காக்கப்பட்டது.
அடுத்ததாக, ஆபிரகாமிற்கு நூறு வயதில் பிறந்த பிள்ளையை மோரியா என்ற மலைக்குக் கொண்டு போய் தேவன் பலியிடச் சொன்னார். அப்படியே கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஆபிரகாம், தன் மனைவியிடம் கூட சொல்லாமல், அவளிடம் கூறினால் அழுது தன்னைத் தடுத்து விடுவாளோ என்று எண்ணி வேலைக்காரரில் இரண்டு பேரை கூட்டிக் கொண்டு அதிகாலையிலேயே கிளம்பி விடுகிறார். கேள்வி கேட்காத கீழ்ப்படிதலை கண்ட ஆண்டவர் ஆபிரகாமை உலகம் முழுவதற்கும் ஆசீர்வாதமாக மாற்றினார். இதைப் போல நாமும் கேள்வி கேட்காமல் ஆண்டவரின் சத்தத்துக்கு கீழ்ப்படியும் போது ஆண்டவர் நம்மை உயர்த்துவார். ஆண்டவர் ஒரு இடத்துக்குப் போகச் சொன்னால் கேள்வி கேட்காமல் சென்றால் ஆண்டவர் நம் மூலம் அற்புதங்களையும் நம் மூலம் செய்ய வேண்டிய காரியங்களையும் செய்து முடிப்பார்.
- C. பால் ஜெபஸ்டின்ராஜ்
ஜெபக்குறிப்பு:
எழுப்புதல் வாலிபர் முகாமிற்கு பல பகுதிகளிலிருந்து வருகிற வாலிபர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864