By Village Missionary Movement
Monday, 05-Aug-2024இன்றைய தியானம்(Tamil) 05.08.2024
அடங்கினால் நன்மை
"ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." - 1 பேதுரு 5:6
ஒரு குரங்கு வேலை கேட்டு ஒரு மனிதனிடம் போய், " நீங்கள் கொடுக்கிற எந்த வேலையானாலும் சொன்னபடியே செய்வேன்" என்றது. உடனே அந்த மனிதன் குரங்கிடம், "ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து, நான் குளித்து விட்டு வரும் வரை வைத்திரு. பின்பு உனக்கு நல்ல வேலை போட்டுத் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்றான். சென்றவன் வருவான் வருவான் என்று காத்திருந்து, காத்திருந்து சோர்ந்து போய்விட்டது குரங்கு. வாழைப்பழம் என்றால் குரங்குகளுக்கு மிகவும் இஷ்டம் அல்லவா. அவன் வர காலதாமதமானதால் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று வாழைப்பழத்தைத் தோலுரித்து தின்றுவிட்டு ஓடிப் போய் விட்டது.
இயேசு கிறிஸ்து நமக்கும் நன்மை, சுகம், மேன்மை, உயர்வு இன்னும் பல பல ஆசீர்வாதங்கள் கொடுக்க வல்லவராய் இருக்கிறார். ஆனால் அவரது கட்டளை என்னவென்றால் அவர் அதை தரும் வரை நாம் அவரது பலத்த கரத்துக்குள் அடங்கி பொறுமையாய் இருக்க வேண்டும். ஆனால் அநேக மக்கள் அதை பெற்றுக் கொள்ளும் வரை அடங்கி இருப்பதில்லை.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவ கோபத்திற்கு ஆளாகி அழிந்து போவதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அந்நியர் கையில் ஒப்புக் கொடுத்தது எப்பொழுது? அவர்கள் தேவனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லப்பட்ட வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனபடியினால் தான்! தேவனுக்கு பிரியமாக வேண்டுமானால் நமது சரீர அவயவங்கள் அனைத்தையும் அடக்க மறக்கக் கூடாது. இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாயின் வார்த்தைகளால் கோபப்படுத்தினார்கள்.
எரேமியா 14:10 சொல்கிறது தங்கள் கால்களை அடக்கிக் கொள்ளாமல் அலைய விரும்புகிறார்கள் என்று கர்த்தர் சொல்கிறார். அதனால் அவர்கள் மேல் அவர்களது அக்கிரமத்தை நினைத்து அவர்கள் பாவங்களை விசாரிப்பேன் என்றார்.
அடங்கி நடக்க வேண்டிய ஆகார் அடங்காமையினால், சாராள் அவளை கடினமாக நடத்த வேண்டி வந்தது. அதனால் ஆகார் ஓட ஆரம்பித்தாள். ஆனால் தேவதூதன் அவளைக் கண்டு, நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு என்றார். ஆனால் அவள் கடைசி வரை அடங்கியிராததினால், அவளும் அவளது பிள்ளையும் துரத்தப்பட்டார்கள்.
எனக்கருமையான தேவபிள்ளைகளே! எந்தெந்த காரியங்கள் தேவனது விருப்பத்திற்கு இணங்காமல் உங்கள் விருப்பப்படியே செய்கிறீர்கள். இது அடங்காமையைக் காட்டும். அடங்காதவர்களின் நிலைமை ஆகாரைப் போல பரிதாபமாகத்தான் இருக்கும். ஆதலால் தேவனின் பலத்த கைக்குள் அடங்கியிருப்போம், நன்மைகளை சுதந்தரிப்போம். ஆமென்!
- Pr. S.L. இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:
முகாமிற்கு தேவையான தண்ணீர், பிஸ்கட், சாப்பாடு தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864