By Village Missionary Movement
Friday, 23-Apr-2021இன்றைய தியானம்(Tamil) 23-04-2021
மன்னிப்பின் துவக்கம்
“...கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” - கொலோசெயர் 3:13
அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணத்தில் ஆளுநராக இருந்த பிராங்க் ஸ்ட்டுனன்பெர்க் என்பவரை ஹேரி ஆர்ச்சர் குண்டு வைத்து கொன்றுவிட்டான். அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஒரு மருத்துவர் சிகாகோவிலிருந்து ஒரு வேதாகமத்தை அவனுக்கு அனுப்பிவைத்தார். அதில் அவனுக்கு சிறிதும் ஆர்வமில்லை. வேதாகமத்தை அவன் தொடக்கூட இல்லை. ஆனாலும் அந்த கருப்பு புத்தகத்தின் மீது கவனம் செலுத்த உள்மனம் உந்திக்கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு நாள் அந்த வேதாகமத்தை அகற்றும்படி சிறைக்காவலரிடம் சொன்னான். ஆனால் என்னவோ தெரியவில்லை திரும்பவும் அதை கொண்டு வரச்சொல்லி அதை வாசிக்க ஆரம்பித்தான். ஆவியானவர் கிரியை செய்தார்.
ஒருநாள் ஹேரியை பார்க்க ஒரு வாலிபன் வந்தான். என் அம்மா இதை கொடுத்து அனுப்பினார் என்று ஒரு பொட்டலத்தை கொடுத்தான். “நீங்கள் செய்த குற்றத்தை மன்னித்துவிட்டோம் என்றும் சொல்லச்சொன்னார்” என்றான். அந்த பொட்டலத்தினுள் “கிறிஸ்துவிடம் செல்லும் படிகள்” என்ற புத்தகம் இருந்தது. அந்த வாலிபன் வேறு யாரும் இல்லை ஹேரியால் கொல்லப்பட்ட ஆளுநரின் மகன். ஹேரி புத்தகத்தை வாசித்து தன்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தான். பின்பு ஆளுநரின் மனைவி ஹேரியை சந்தித்து சில ஆவிக்குரிய புத்தகங்களை கொடுத்தார். மெய்யான மனமாற்றம் அடைந்து, சிறையில் இருந்து வெளியே வந்து அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவனாக, உண்மையுள்ள சாட்சியாக ஹேரி வாழ்ந்தான்.
பரிசுத்த வேதாகமத்திலே, தனக்கு தீமை செய்தவர்களையும் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்ட நபர்களைக் குறித்து வாசிக்கிறோம். யோசேப்பு, தாவீது, ஸ்தேவான்... இப்படி பலர் உண்டு! இவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு பதில் தீமை செய்யாமல் மன்னித்து நன்மை செய்தனர். எல்லாருக்கும் மேலாக இயேசுகிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்து, முகத்தில் துப்பி, ஈட்டியால் விலாவை பிளந்து, வாரினால் அடித்தவர்களுக்காக பிதாவிடம் மன்றாடுகிறார். “பிதாவே! இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று ஜெபிக்கிறார்.
தேவனுக்கு பிரியமானவர்களே! நமக்கு துன்பம் செய்தவர்களுக்காகவும், துரோகம் செய்தவர்களுக்காகவும் ஜெபிக்கிறோமா? ஜெபித்தால் அவர்களை மன்னிப்பது எளிதாக மாறும். மன்னித்தால் அவர்களுடைய ஆத்துமாவின் மேல் கரிசனை உண்டாகும். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபத்திலும் செயலிலும் முயற்சி எடுப்பீர்கள். எவரையும் இரட்சிக்க வல்லமையுள்ள தேவன் அவர்களை இரட்சிப்பார். ஆம், மன்னிப்பின் துவக்கம் ஜெபத்தில் ஆரம்பமாகட்டும்.
- P. சிவா
ஜெபக்குறிப்பு:
கிராமங்களில் வழிநடத்தப்பட்டு வரும் வாலிபர்கள், சிறுவர்கள் இயேசுவை விட்டு பின்வாங்காமல் இருக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250