By Village Missionary Movement
Wednesday, 24-Jul-2024இன்றைய தியானம்(Tamil) 24.07.2024
போதும் என்கிற மனம்
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” - 1 தீமோத்தேயு 6:6
பேராசை பிடித்த நாய்க்குட்டி ஒன்று இருந்தது. எல்லாமே தனக்கு என நினைக்கும் குணம் அதிகமாக காணப்பட்டது. ஒரு நாள் அதற்கு பசி. உணவுக்காக அங்கும் இங்கும் ஓடியது. உணவு கிடைக்கவில்லை. ஒரு யோசனை தோன்றியது. கடை வீதிக்குச் சென்றால் ஏதாகிலும் கிடைக்கும் என்று கடைவீதிக்குச் சென்றது. அங்கு ஒரு கறி கடையை பார்த்ததும் மிகுந்த சந்தோஷம். ஒரு சிறிய கறி துண்டு கிடைச்சா போதும் என்று நினைத்த நாய்க்குட்டிக்கு ஒரு பெரிய எலும்பு துண்டு அங்கே கீழே கிடப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இரண்டு நாட்களுக்கு போதுமான உணவு கிடைத்து விட்டது என்று அதை எடுத்துக் கொண்டு ஒரு நதியோரமாகச் சென்றது. அப்போது அந்த நதியை எட்டிப் பார்த்தது. இதைப்போலவே ஒரு உருவம் வாயில் பெரிய எலும்பு துண்டுடன் காணப்பட்டது. இந்த நாய்குட்டி அந்த நாயை விரட்டி அடித்தால் நமக்கு அந்த எலும்பும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தண்ணீரைப் பார்த்து ஆவேசமாக குறைத்தது. வாயில் இருந்த எலும்பு துண்டு கீழே நதியில் விழுந்துவிட்டது. கொஞ்சம் நேரம் கழித்துத்தான் அது தன்னுடைய உருவம் என்றும் அது உண்மையான நாய் அல்ல என்றும் தெரிந்தது.
அப்போஸ்தலர் பவுல் தீமோத்தேயுக்கு எழுதும் போது இப்படியாக எழுதுகிறார். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என்று! சிலர் எதிலும் திருப்தியடைய மாட்டார்கள். சிலர் இன்னும் இன்னும் என ஓடி கடைசியில் எல்லாவற்றையும் இழந்து நிற்பார்கள். உண்ணவும், உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம் எனவும் குறிப்பிடுகிறார். எல்லாவற்றிலும் திருப்தியுள்ள வாழ்க்கை வாழவும், மனரம்மியமாயிருக்கவும் கற்றுக்கொண்டேன் எனவும் எழுதியுள்ளார்.
இதை வாசிக்கின்ற தேவ ஜனமே! ஆண்டவரை பின்பற்றுகிற நாமும் எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்மியமாய் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். "பேராசை பெரு நஷ்டம்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. தேவன் தம்மை உண்மையாய்ப் பின்பற்றும் பிள்ளைகளுக்கு எந்த குறையும் வைப்பதில்லை. கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறைவும் ஏற்படாது. எனவே உணவு, உடை, இருப்பிடம் இவைகள் நமக்கு இருக்கும் போது இவைகளை போதுமென்று எண்ணுவோம். தேவன் நம்மை ஆசீர்வதித்திருப்பார் என்றால் இவற்றிலிருந்து ஊழியங்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவிடுவோம். இதுவே உண்மையான பக்தியும் கூட. நம்மிடம் இருப்பதை வைத்து பரலோகத்திற்கு அநேகரை சொந்தக்காரர்களாக மாற்றுவோம்.
- T. ராஜன்
ஜெபக்குறிப்பு:
சிறுவர் முகாம்கள் மூலம் 10 இலட்சம் சிறுவர்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864