Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 11.04.2024

இன்றைய தியானம்(Tamil) 11.04.2024

 

வழிகாட்டி

 

"…தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார்" - 1 பேதுரு 2:21

 

நாம் ஒவ்வொருவரும் யாரையாவது பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். சிறுவயதில் தாய், தகப்பனைக் கண்டு அவர்களைப் போல வாழ ஆரம்பிக்கிறோம். பின்பு ஆசிரியர்கள் மற்றும் நமக்குப் பிடித்த ஆட்களைப் பார்க்கும் போது அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவோம். வாலிப வயதில் கிரிக்கெட் வீரர்கள் அல்லது சினிமா ஹீரோக்களைப் பின்பற்ற ஆரம்பிக்கிறோம். வளர வளர பிடித்த அரசியல்வாதிகள், தலைவர்களை நம் வாழ்க்கையின் மாதிரியாக பின்பற்ற ஆரம்பித்து விடுகிறோம். எல்லோரையும் விடச் சிறந்த முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தவர் இயேசு மட்டுமே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான முன்மாதிரியான பல காரியங்களைச் செய்து, வாழ்ந்து சென்றுள்ளார். அவற்றுள் சில காரியங்களை சிந்திப்போம்.

 

அன்பு: அவர் அன்பு காட்டுவதில் முன்மாதிரியாக இருந்தார். அவர் தம்முடைய சீஷர்கள் மேல் மிகுந்த அன்பு பாராட்டினார். இயேசு தம்முடைய சீஷர்களை சிநேகிதர் என அழைத்தார். மனுக்குலத்திற்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்து தம்முடைய அன்பை விளங்கப்பண்ணினார்.

 

தாழ்மை: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம் கீழப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:6-8) இன்னும் இயேசு தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்தும் விதமாக தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவினார். என்னே ஒரு தாழ்மை! அவரது தாழ்மை மரணம் வரை தொடர்ந்தது. நாமும் மெய் 

மனத்தாழ்மை உள்ளவர்களாய் வாழ்வோம்.

 

பரிசுத்த வாழ்வு: ஆண்டவராகிய இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் பரிசுத்தமாய், குற்றமற்றவராய் வாழ்ந்து காட்டினார். நான் பரிசுத்தர் ஆகையால் பரிசுத்தமாய் நீங்களும் வாழுங்கள் என்று வாழ்ந்து காட்டியுள்ளார். இயேசுவின் பரிசுத்த வாழ்வை தினமும் வாஞ்சிப்போம். பரிசுத்தமில்லாமல் நாம் தேவனைத் தரிசிக்க முடியாதே!

 

மன்னிப்பு: பிறரை மன்னிப்பது மிகவும் அவசியமான ஒன்று. இயேசு கற்பித்த ஜெபத்தில் பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிக்கிறது போல எங்களின் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று ஜெபிக்க கற்றுக் கொடுத்தார். நம்மை இயேசுவானவர் மன்னித்து ஏற்றுக் கொண்டது போல நாமும் பிறருக்கு மன்னிப்போம்.

 

இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே, நம் வாழ்வின் சிறந்த வழிகாட்டி இயேசு என்பதை இவ்வுலகில் வாழ்ந்து காட்டுவோம். அவர் காட்டிய வழியில் நடந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஆசீர்வாதம் பெறுவோம். ஆளுகையும் செய்வோம். ஆமென்!

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு:

பிலிப் காஸ்பல் டீம் மூலம் சந்திக்கப்படும் கிராமங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)