இன்றைய தியானம்(Tamil) 04-03-2021
இன்றைய தியானம்(Tamil) 04-03-2021
சாதுரிய ஞானம்
“...நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.” – அப். 26:2
தேவனுடைய திருச்சபையானது சில நூற்றாண்டுகளாகவே இருண்ட காலங்களில் கடந்து சென்றது. சரியான உபதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு, மனிதர்களுக்கும் தூதர்களுக்கும் திருச்சபைகளில் ஆராதனை ஏறெடுக்கப்பட்டது. கி.பி.15ஆம் நூற்றாண்டில், இரண்டாம் பவுல் என அழைக்கப்பட்ட மார்ட்டின் லூத்தர் மூலம் திருச்சபைகளில் பெரியதொரு சீர்திருத்தம் உண்டானது. அவர் வேதாகமம் போதிக்கும் ஆராதனைகளுக்கு விரோதமாக இருக்கும் எல்லாவித தவறுகளையும் தைரியமாக சுட்டிக்காட்டி பேசினார். விட்டன்பர்க் நகர ஆலயத்தில் 95 வேதாகமக் கோட்பாடுகள் அடங்கிய வாசகத்தை எழுதி ஆலய கதவிலே ஒட்டினார்.
இதனால் அன்றைக்கு இருந்த மதத்தலைவர்கள் மூலம் பல கொலை மிரட்டலுக்கு உள்ளானார் மார்ட்டின் லூத்தர். ரோமாபுரியில் கார்டினல் கெசட் என்பவரது முன்னிலையில் நியாயம் விசாரிக்கப்பட்டார். மேலும் விட்டன்பர்க் நகரத்திலும் விசாரணை என்ற பெயரில் நடத்தப்பட்ட எந்த ஒரு மிரட்டலுக்கும் அஞ்சாமல், மனிதனுக்கு பயப்படும் பயத்தை துச்சமென எண்ணினார். தான் நியாயம் விசாரிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் சாதுர்யமாகவும் ஞானமாகவும் பேசி சத்தியத்தை பிரசங்கித்தார்.
இன்றைய வேதபகுதியிலும் பவுல் அப்போஸ்தலன், பெஸ்து, பேலிக்ஸ் மற்றும் அகிரிப்பா ராஜாவின் முன் நியாயம் விசாரிக்கப்படுகிறதை வாசிக்கின்றோம். அந்நாட்களில் இருந்த பரிசேயர் மற்றும் சதுசேய தலைவர்களால் பவுலுக்கு பலவகைகளிலும் கொலை மிரட்டல்கள் வந்ததையும் வாசிக்கிறோம். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படி எல்லாருக்கும் எல்லாம் ஆனேன் என்ற பவுல், தான் நியாயம் விசாரிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் ஞானமாக பேசினார். அதே நேரத்தில் அந்த இடத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்படும்படியாக சுவிசேஷத்தையும் தைரியமாக கூறினார்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இந்த தலைமுறையிலும் சுவிசேஷத்தை அறிவிப்பதில் பல இன்னல்களை சந்தித்துதான் வருகிறோம். இதன் மத்தியிலும் மார்ட்டின் லூத்தர், பவுல் போன்ற எண்ணற்ற சாட்சிகள் நம்மை உற்சாகப்படுத்தும்படியாக உண்டு. ஆகவே ஊழியப் பாதையில் சோர்ந்து போகாதபடி நாம் தேவனிடத்தில் கிருபையையும், ஞானத்தையும் கேட்டு பெற்றுக்கொள்வோம். நாம் ஊழியத்தில் சந்திக்கும் எல்லா சவால்களையும் மேற்கொண்டு சுவிசேஷத்தையும் சத்தியத்தையும் அறிவிக்க தேவன் நமக்கு கிருபை செய்வாராக.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
இராக்லாந்து வேதாகம கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250